ஞாயிறு, 18 ஜூன், 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை! June 18, 2017

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் ஆணைய செயலாளர் மலாய் மாலிக் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றது தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 

இந்நிலையில், இவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதில் அளிக்குமாறு, தேர்தல் ஆணையத்துக்கு வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணைய செயலாளர் மலாய் மாலிக், இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளார்.

இந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது, காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts: