
கடந்த ஜீலை ஒன்றாம் தேதி முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நள்ளிரவில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஆடம்பர கார்கள், விடுதிகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றிற்கு வரிகள் விதிக்கப்பட்டதாக பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.
பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் காலங்களில் பல மாநிலங்களில் பெண்களிடையே சுகாதார விழிப்புணர்வுகள் இல்லாத காரணங்களால் சாம்பலை பயன்படுத்துதல், பழைய துணிகளை பயன்படுத்தும் நிலையில், நாடுமுழுவதும் பெண்களுக்கு நாப்கின்கள் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் தீவிரமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், நாப்கினுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இந்திய மாணவர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாப்கினுக்கு விதிக்கப்பட்ட வரியை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு நாப்கின் அனுப்பும் போராட்டத்தை துவக்கியுள்ளது. இந்திய மாணவர் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் உள்ள பெண்கள் மத்திய அரசிற்கு நாப்கின்களில் Bleed without tax #BleedWithoutFear என்ற வாசகங்களை எழுதி அனுப்பி வருகின்றனர்.






மேலும் நாப்கின்களுக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்பை வீடியோ மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளும், பெண்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போராட்டத்திற்கு ஆண்களும் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.





