வியாழன், 30 ஜூன், 2022

கைதான பத்திரிக்கையாளர் முகமது ஜீபைர் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் : டெல்லி காவல்துறை

 29 6 2022 

கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் முகமது ஜீபைர் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

போலி செய்திகளை கண்டறிந்து, அதன் பின் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் வேலையை  ’ஆல்ட் நியூஸ்’ நிறுவனம் செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர். இவர் 2018ம் ஆண்டு வலதுசாரி செய்தி ஒன்றை அடையாளம் கண்டு, இது தொடர்பாக ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். அந்த ட்வீட் வன்முறையை தூண்டும் விதமாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கை கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. அவரை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் முகமது ஜீபைர் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி சைபர் காவல்துறை டிசிபி மல்கோத்ரா கூறுகையில், ‘முகமது ஜீபைர் வங்கி கணக்கிற்கு, கடந்த மூன்று மாதங்களில், ரூ.50 லட்சம் வரை பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. யார் இந்த பணத்தை அனுப்பி உள்ளனர் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சந்தேகத்திற்குரிய அமைப்புகளிடமிருந்து பணம் வந்திருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால், முகமது ஜீபைர் தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஆல்ட் நியூஸ் நிறுவனத்திற்கு வரும் பணம் எல்லாம், நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்குதான் போகும். எந்த தனிநபர் வங்கிகணக்கிற்கும் போகாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்களிடம் இருந்து பெறும் கூடு நிதி மூலம்தான் இந்நிறுவனம் செயல்படுகிறது. இதனால் இந்நிறுவனத்திற்கு வரும் பணப் பரிமாற்றம் வெளிப்படையாக நடந்துள்ளது. காவல்துறையினர் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்று முகமது ஜீபர் தரப்பு கூறியுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/zubair-arrest-police-allege-rs-50-lakh-transactions-in-account-472285/