புதன், 22 ஜூன், 2022

‘அக்னிபாத்’-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்- வேல்முருகன்

 

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராணுவத்தில் ஆள் சேர்ப்பது என்பது சுதந்திர இந்தியாவில் தொன்று தொட்டு நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு. முறையாக அவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளித்து, பாதுகாப்பு படை என்று சொல்லக்கூடிய எல்லையில் இந்த தேசத்தை காப்பதற்காக தன் உயிரை துச்சமாக நினைத்து களத்தில் நிற்க கூடியவர்கள் ராணுவ வீரர்கள்.

இந்தியாவில் இருந்த ஜவகர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் காலத்தில் என்ன நடைமுறையில் இருந்ததோ அதே நடைமுறைதான் ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க நிகழ்விலும் இருக்க வேண்டும்.
இந்திய நாட்டின் பாதுகாப்பை தனியாரிடம் ஒப்படைப்பது அல்லது தனியார் ஏஜென்சி மூலமாக ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்வது அல்லது ஒப்பந்த அடிப்படையில் பிடிப்பில்லாமல் இளைஞர்களை கொண்டுபோய் அதிலே திணிப்பது ஏற்புடைய செயலல்ல. இந்த திட்டத்தை உடனடியாக ராணுவ அமைச்சகம் கைவிட வேண்டும். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக எங்களது கட்சியில் இருக்கும் இளைஞர்கள் மாணவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதற்கு ஒன்றிய அரசு ஆதரவாக இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக இருப்பவர் ஒரு சார்பு நிலை எடுப்பது கண்டிக்கத்தக்கது. ஆதலால் காவிரி மேலாண்மை வாரியத்தை தலைவரை உடனடியாக அந்தப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்றைய தினம் மாலை எதிர்கட்சி சட்டமன்ற தலைவர்கள் கொண்ட குழு மாலை டெல்லிக்குச் சென்று நாளை நீர்ப்பாசனத் துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறது. அப்போது எமது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழருக்கும், விவசாயிகளுக்கும் துரோகமிழைக்கும் காவேரி மேலாண்மை தலைவர் பொறுப்பில் இருப்பவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம்  என்று கூறினார்.

source https://news7tamil.live/the-biggest-fight-will-take-place-against-agnipath-velmurugan.html