ஞாயிறு, 31 மார்ச், 2024

ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிப்பு முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ உள்ளன

 

மார்ச் 31 முதல் 2023-24 ஆம் நிதியாண்டு முடியும் வேளையில், புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்குகிறது. இந்த புதிய நிதியாண்டில் மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர்  அறிவித்த வருமான வரி சம்பந்தமான மாற்றங்கள் இந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் வருடத்தின் இறுதியில் தேவையில்லாத டென்ஷன், வரிக்காக பணத்தை இழக்க நேரிடும்.

இந்த நிலையில் 2024-25 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வருமான வரி மாற்றங்கள் பின்வருமாறு:

புதிய வரி முறை – டீபால்ட் தேர்வாகிறது!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், புதிய வரி முறையில் அதிகமானோர் பங்கேற்க ஊக்குவிக்கும் நோக்கத்திலும், மத்திய நிதியமைச்சகம் புதிய வரி முறையே இயல்பான தேர்வாக அதாவது default Option ஆக இருக்கும். இருப்பினும், தனிநபர் பழைய வரி முறையில் தங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்தால் வரி செலுத்துவோர் பழைய வரி முறையைத் தேர்வு செய்து கொள்ளும் சுதந்திரம் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

புதிய வரி விதிப்பு அடுக்குகள் (New Tax Slabs):

புதிய வரி முறையில் வரி விதிக்கப்படும் தொகைக்கான வரம்புகள் (Tax Slabs) மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி இனி வரும் நிதியாண்டில்,

  • ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும்,
  • ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும்,
  • ரூ. 9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும்,
  • ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும்,
  • ரூ. 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படும்.

வரி செலுத்துபவர்களுக்கு இனி குறைந்த வரிச் சுமை:

முன்னதாக பழைய வரி முறையில் மட்டுமே வழங்கப்பட்ட ரூ.50,000/- என்ற நிலையான விலக்கு (Standard Deduction) தற்போது புதிய வரி முறையிலும் பொருந்தும். இதன் காரணமாக, புதிய வரி முறையில் வரி செலுத்துபவர்களின் வரிக்குட்பட்ட வருமானம் கூடுதலாக குறையும்.

பெரும் செல்வந்தர்களுக்கான வரிச் சுமை குறைப்பு!

ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி (Surcharge) 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் செல்வந்தர்களுக்கு வரிச் சுமையைக் குறைக்கும்.

ஆயுள் காப்பீட்டு முதிர்வு தொகைக்கு வரி:

ஏப்ரல் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் முதிர்ச்சித் தொகை, மொத்த பிரீமியம் ரூ.5 லட்சத்தை மீறினால், அந்தத் தொகைக்கு வரி விதிக்கப்படும்.

விடுப்புச் சம்பள விலக்கு:

அரசு ஊழியர் அல்லாதோருக்கு வழங்கப்படும் விடுப்புச் சம்பளத்திற்கான ( leave encashment) வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

source https://news7tamil.live/what-are-the-changes-in-income-tax-from-1st-april-here-is-the-full-details.html