சனி, 30 மார்ச், 2024

72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்… காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு IT நோட்டீஸ்!

 

காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் எனவும், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை, ரூ.11 கோடி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், “காங்கிரஸ் கட்சி ரூ.1,823.08 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. வருமான வரித்துறை விதிமீறல்களுக்கு விதிக்கும் அபராதத்தின் அடிப்படையில் பார்த்தால் பாஜக ரூ.4,600 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அடுத்த வார தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடும். தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் நிதி ரீதியாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி நிலுவைத் தொகையை செலுத்துமாறு வருமான வரித்துறை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பை எதிர்கொள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலுவைத் தொகையில் பழைய பான்கார்டை பயன்படுத்தியதால் செலுத்த வேண்டிய அபராதம் மற்றும் வட்டி ஆகியவை அடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் வருமானவரித்துறை மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 72 மணி நேரத்தில் 11 நோட்டிஸ்களை அனுப்பியுள்ளதாக அக்கட்சியின் எம்.பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே, “ தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவோம் என்று மோடி அரசு காட்டிக் கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ED வேலை செய்யாதபோது, IT துறையைப் பயன்படுத்தப்படுகிறது. ஏன் இவ்வளவு அவநம்பிக்கை” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/11-notices-in-72-hours-it-notices-to-trinamul-congress-party-after-congress-communist-parties.html#google_vignette