வியாழன், 28 மார்ச், 2024

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ரூ.50,000 கடந்து விற்பனை!

 

28 3 2024 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது. 

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை (நேற்று) மார்ச் 27 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 120 உயர்ந்து  ரூ.49,720 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும்,  சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்த நிலையில்,  சாமானிய மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.  இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50 க்கு விற்பனையாகிறது.

source https://news7tamil.live/gold-price-hits-new-high-rs-gold-price-touched-50000.html#google_vignette