செவ்வாய், 12 மார்ச், 2024

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில்,  மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர்,  குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நேற்று அமல்படுத்தியுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சிஏஏ அமல்படுத்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும்,  அரசியல் தலைவர்களும், சமூக நல அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன.  அந்த வகையில், SDPI கட்சி சார்பில்  சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ரமலான் நோன்பு இன்று துவங்கிய நிலையில் சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே SDPI கட்சியினர் சிஏஏவை கண்டித்தும், சிஏஏ சட்டத்தை திரும்பு பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இஸ்லாமியர்கள் பாதிப்பு அடைவார்கள் என்ற நோக்கத்தில் சென்னை மண்ணடியை சேர்ந்த SPDI  கட்சியினர் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கையில் ‘சிஏஏ வை தடை செய்’ மற்றும் ‘பாஜக அரசை கண்டிக்கிறோம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் ஊர்வலமாக வந்து கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்,  கையில் வைத்திருந்த பதாகைகளை கிழித்து எரிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


source https://news7tamil.live/spdi-caacitizenshipamendmentact-uniongovernment-bjp-indiancitizenship-minoritiescaarules.html#google_vignette