செவ்வாய், 3 செப்டம்பர், 2024

பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்!

 

கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன. இந்நிலையில், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (செப். 2) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுருந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அவர் கூறியதாவது,

“Internal Complaints Committee என்று அழைக்கப்படும் உள்புகார் குழுவை அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் முறையாக அமைக்க வேண்டும். புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug clubகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகள் போன்றவற்றில் வெளியாட்கள் பணிகளுக்காக உள்ளே வந்தால் அவர்களுடன் கல்லூரியை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து இந்த பணிகளை கண்காணிக்க வேண்டும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை காட்டிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதை தக்கவைக்கும் வகையில், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத நிலையை கல்வி நிலையங்களில் ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் நடக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல அனைத்து கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமிக்க பரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/increasing-sexual-accusations-in-schools-and-colleges-advice-given-by-chiefsecretary-muruganandam.html