புதன், 18 பிப்ரவரி, 2026

வேளாண் பட்ஜெட் 2026: ரூ.47,248 கோடி ஒதுக்கீடு - முக்கிய சிறப்பம்சங்கள்

 

வேளாண் பட்ஜெட் 2026: ரூ.47,248 கோடி ஒதுக்கீடு - முக்கிய சிறப்பம்சங்கள்

17 2 2026
MRK Panneerselvam assmbly

நெல் சாகுபடி மற்றும் கொள்முதல் விலை உயர்வு: கொள்முதல் விலை: சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 156-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ. 131-ம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கொள்முதல் விலை முறையே ரூ. 2,545 மற்றும் ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை (17.02.2026) தாக்கல் செய்தார். கடந்த ஐந்தாண்டு கால சாதனைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய இந்த பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் இதோ:

1. நிதி ஒதுக்கீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி:
ஒதுக்கீடு உயர்வு: 2021-22-ல் ரூ. 34,220 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 47,248.24 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி: வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GSDP) கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது.

2. நெல் சாகுபடி மற்றும் கொள்முதல் விலை உயர்வு:
கொள்முதல் விலை: சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 156-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ. 131-ம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கொள்முதல் விலை முறையே ரூ. 2,545 மற்றும் ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல்: கடந்த 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ. 2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல்: ‘நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்’ கீழ் 70,000 விவசாயிகளுக்குப் பாரம்பரிய விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

3. சிறுதானியங்கள் மற்றும் பயிர் உற்பத்தி:
சிறுதானிய புரட்சி: தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தென்னை மற்றும் பனை: தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 லட்சம் கன்றுகளும், பனை மேம்பாட்டிற்காக 68 லட்சம் பனை விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

4. இலவச மின்சாரம் மற்றும் பாசன வசதிகள்:
மின் இணைப்புகள்: கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தி: ரூ. 83 கோடி மானியத்தில் 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

5. காப்பீடு மற்றும் நிவாரண உதவிகள்:
பயிர்க் காப்பீடு: கடந்த 5 ஆண்டுகளில் 38 லட்சம் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீடாக ரூ. 6,063 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் நிவாரணம்: இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 25.36 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2,045 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

6. இளைஞர்களுக்கான வேளாண் தொழில் மற்றும் கல்வி:
தொழில் முனைவோர்: 456 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ. 4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி: நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் மற்றும் கிருஷ்ணகிரியில் புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

7. கடன் வசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு:
பயிர்க்கடன்: கடந்த 5 ஆண்டுகளில் 83.64 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 69,457 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

உழவர் பாதுகாப்பு: உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி, திருமணம் மற்றும் விபத்து நிவாரணமாக ரூ. 819 கோடி வழங்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-interim-agriculture-budget-2026-key-highlights-mrk-panneerselvam-11124434