செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

யூடியூபரை தாக்கியதாக புகார்: 21 நாட்களுக்குப் பின் பாய்ந்தது வழக்கு

 solis

யூடியூபரை தாக்கியதாக புகார்: 21 நாட்களுக்குப் பின் சோளிங்கர் த.வெ.க எம்.எல்.ஏ மீது பாய்ந்தது வழக்கு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் உள்ளிட்டோர் மீது 21 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சோளிங்கரில் உள்ள திரையரங்கில் முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ. கபிலிடம், சிவா என்ற யூடியூபர் படம் குறித்துக் கருத்து கேட்க முற்பட்டுள்ளார். அப்போது எம்.எல்.ஏ. கபில் அவரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவின. 

தொடர்ந்து, யூடியூபர் சிவாவைத் தேடி எம்.எல்.ஏ. கபிலும் அவரது ஆதரவாளர்களும் சென்று, அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்களான அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டதைத் தொடர்ந்து, சோளிங்கர் காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். அப்போது, சம்பவத்தை நிருபர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோக்களைக் காவல் அதிகாரி ஒருவர் அழித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தாக்குதலில் காயமடைந்த யூடியூபர் சிவா மற்றும் செய்தியாளர்கள் இருவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துப் பத்திரிகையாளர்களும் அவர்களது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்திலும், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சிபினிடமும் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் நடந்து 21 நாட்களுக்குப் பிறகு, சோளிங்கர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன் மற்றும் சிலர் மீது காவல்துறையினர் தற்போது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/attack-on-journalists-sholinghur-tvk-mla-kapil-booked-under-3-sections-after-21-days-police-register-case-against-tvk-mla-kapil-and-brother-12348394