ஞாயிறு, 7 மே, 2017

தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி என உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை கால்டுவெல்! May 07, 2017

தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி என உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை கால்டுவெல்!


தமிழறிஞர் கால்டுவெல்லில் 200வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி 2014ம் ஆண்டு மே 4ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு இது. 

கால்டுவெல் தமிழுக்கு செய்த தொண்டுகளையும், அவரது பிறந்தநாளை கொண்டாடுவதன் அவசியம் குறித்து மூத்த அரசியல்வாதி என்பதைக் கடந்து தமிழறிஞர் என்ற முறையில் திமுக தலைவர் மு.கருணாநிதி தனது பார்வையினை இக்கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். 

இந்நாளின் சிறப்புக் கருதி நியூஸ்7தமிழ் திமுக தலைவர் கருணாநிதியின் இப்பதிவை முழுமையாக இங்கு வெளியிடுகிறது...

அறிஞர் கால்டுவெல் அவர்கள் தமது 77 ஆண்டுகளில் 53 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளால் இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற அந்த மாமேதை கால்டுவெல் பிறந்த 200ஆம் ஆண்டு 7.5.2014 அன்று நிறைவுபெறும் வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத் தமிழ்ச் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம்! வாழ்க கால்டுவெல் அவர்களின் புகழ்!

மாமேதை கால்டுவெல் மாமேதை கால்டுவெல் கால்டுவெல் 200வது ஆண்டு விழா 200வது ஆண்டு விழா... .

நன்றியுடன் போற்றி மகிழ்வோம்! நன்றியுடன் போற்றி மகிழ்வோம்!


தமிழ் மொழியின் இலக்கணக் கட்டமைப்பும், இலக்கியச் செழுமையும் எவரையும் ஈர்க்கவல்லவை. அதனால்தான் சமயத் தொண்டுகளாற்றிட வந்த ஐரோப்பிய குருமார்கள் தமிழ் மொழியினால் ஈர்க்கப்பட்டு, அதன் சிறப்புகளில் மயங்கி, அதன் மேன்மைகளை மேதினிக்குப் புலப்படுத்தினர். அவருள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி - செம்மொழி - திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த முதல் மொழி எனக்கூறி, உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை கால்டுவெல்!

அயர்லாந்து நாட்டில், ‘கிளாடி’ ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூரில், ஓர் ஏழைக் குடும்பத்தில் 1814ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் பிறந்தவர். குடும்ப ஏழ்மை காரணமாக, அவர் தமது இளமைக் காலக் கல்வியை முறையாகப் பயில வாய்ப்புக் கிடைக்காத நிலையில் தாமாகவே முயன்று கற்கத் தொடங்கினார்; சமயத் துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக இலண்டன் மிஷனரி (London Missionary Society) சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கம் அவரை, கிருத்தவக் குருமார்களுக்குரிய பயிற்சி பெறுவதற்காக கிளாஸ்கோ பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியது. அங்கு அவர் ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும், சமய நூல்களையும் கற்று; இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது, கிரேக்க மொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் கெய்ட் ஸ்டான்போர்ட் (Daniel Keyte Stanford) என்பார், அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு உணர்த்திய முறை கால்டுவெல் பெருமகனாரைக் கவர்ந்து; மொழியியல் துறையில் அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது!

பேராசிரியர் ஸ்டான்போர்ட் வகுப்பறைகளில் வெளிப்படுத்திய மொழியியல் நுட்பங்களால் ஈர்க்கப்பட்ட கால்டுவெல், மொழிகளிடையே ஒப்பாய்வு செய்வதில் ஆர்வம் காட்டினார். அவர் அன்று அங்குப் பெற்ற ஒப்பியல் ஆய்வுத் திறன்கள்தாம் தமிழகத்தில் தமிழ் மொழியின் மாண்பை இன்று நாம் மட்டுமல்ல; உலகமே உணர்ந்து போற்றுதற்குப் பெரிதும் காரணமாய் அமைந்தன.

கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சீரிய முறையில் சமயக் கல்வி கற்று முடித்த பின், கால்டுவெல், 1838ஆம் ஆண்டு, சனவரி திங்கள் 8ஆம் நாளன்று தமது 24ஆம் வயதில் மதபோதகராகச் சென்னை மாநகர் வந்து தமது சமயப் பணியைத் தொடங்கி; "நற்செய்தி பரப்புவதற்கான சபை"" (Propagation of the Gospel Mission) குழுவினருடன் இணைந்தார். அப்போது, இங்கு ஆற்ற வேண்டிய தமது பணிக்குத் தமிழ் மொழியைக் கற்பது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து தமிழை முறைப்படிப் பயிலத் தொடங்கினார்.

1841இல் குரு பட்டம் பெற்று, நெல்லையில் பேராயராகப் பொறுப்பேற்று இடையன்குடி என்னும் ஊரில் தங்கி, தமது சமயப் பணிகளைச் சிறப்புடன் ஆற்றி, தமிழ் மொழியையும் செம்மையாகக் கற்றார்; பன்னூறு ஓலைச் சுவடிகளையும், சங்ககாலத் தமிழ் இலக்கியங்களையும் பயின்றார்; மதகுருவாக அங்குப் பணியாற்றிய காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புதைபொருள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். அதன் பயனாகப் பழங்காலக் கட்டடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள் பலவற்றையும் வெளிக்கொணர்ந்தார்; அவற்றுடன், பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களையும் கண்டுபிடித்தார்; இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தாம் கண்டவற்றை, "திருநெல்வேலி சரித்திரம்"" எனும் பெயரில் நூலாக உருவாக்கினார்; அந்நூல், 1881ஆம் ஆண்டு சென்னையில் அப்போதிருந்த ஆங்கிலேய சென்னை மாகாண அரசினால் வெளியிடப்பட்டது.

டாக்டர் கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளுடன் மொத்தம் 18 மொழிகளைக் கற்றவராக விளங்கினார். அப்போது, கிளாஸ்கோ பல்கலைக் கழகம் தந்த மொழியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி இம்மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வினிடையே தென்னிந்திய மொழிகளுக்கிடையே பொதிந்து கிடந்த ஒப்புமைகளை, அம்மொழிகளுக்குள் உயர்ந்து விளங்கிய தமிழ் மொழியின் தனித்தன்மையைக் கண்டு வியந்தார். அதன்பயனாக, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளைக் குறித்திட, ‘திராவிட மொழிகள்’ என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தார்.

அத்துடன், திராவிட மொழிகளுக்கிடையே பின்னிப் பிணைந்து கிடந்த உறவுகளை, ஒப்புமைகளைத் தெளிவுபடுத்தி, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A Comparative Grammar of the Dravidian Languages) என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலைப் படைத்தார்.




வடமொழியைத் "தேவ பாஷை" எனவும், தமிழை "நீச்சபாஷை"" எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என வடமொழிச் சார்பாளர்கள் நேராகவும், உரைகளின் வழியாகவும் பொய் மூட்டைகளைப் பரப்பி வந்த கால கட்டத்தில்; தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெல் அவர்களின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் நூல் ஆகும். அந்நூலின் வாயிலாக தமிழ் மொழி மிகச் சிறந்த செவ்வியல் மொழி எனவும், தமிழ்ச் சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் இடம் பெற்றுள்ளன எனவும், தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் எனவும், இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும், திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் - திருந்தாத மொழிகள் என இரண்டு வகையாகப் பகுத்தும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தினார்.

வடமொழிச் சார்பாளர்கள் போலவே கீழை நாட்டு அறிஞர்கள் சிலரும் திராவிட மொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றே கூறினர். அவர்களின் அக்கருத்தை கால்டுவெல் அவர்கள் வன்மையாக மறுத்து, திராவிட மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை; அவற்றுள்ளும் தமிழ் வடமொழியின் துணையின்றித்தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவினார். இதனை, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் நூலில் - " சமஸ்கிருதத் துணை வேண்டாத் திராவிடத் தனித்தன்மை" எனும் தலைப்பின் கீழ், பத்தி நான்கில் :-
"திராவிட மொழிகளைச் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழை நாட்டு மொழிநூல் அறிஞர்கள், சமஸ்கிருதச் சொற்கள், எங்கே அருகி இடம் அறிஞர்கள், சமஸ்கிருதச் சொற்கள், எங்கே அருகி இடம் பெறுவதல்லது, பொதுவாக, அறவே இடம் பெறாதனவாய திருந்தாத் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர். திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர்... சமஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள் தாமும், சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள் தாமும், அச்சொற்களை, ஆடம்பரப் பொருளாகவும், அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது, மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை யாகலின், அவற்றை அறவே அறிந்தவரல்லர்.

தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தத்தம் தனிநிலைகளை நிலை தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தத்தம் தனிநிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு சமஸ்கிருதச் சொற்களை அளவிற்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன; அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின், தன்னுடைய சமஸ்கிருதக் கலவைகளைக் கைவிடுவது தெலுங்கு மொழிக்கு, இப்பொழுது அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம்; மலையாளத்திற்கு அவை எல்லாவற்றைக் காட்டிலும் அரிதாம். 

அவற்றின் இயல்பு அதுவேயாயினும், திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு; அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வது இயலும்.”- என்றும்;

"கிருத்துவ சமயத்திற்குரிய ""பத்து கட்டளை"களின் தமிழ் மொழி பெயர்ப்பில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களின் எண்ணிக்கை, அதன் ஆங்கில நடையில் இடம் பெற்றிருக்கும் இலத்தீன் சொற்களின் எண்ணிக்கையோடு அடியொட்டி ஒத்துள்ளது என்றாலும், ஆங்கிலம் இலத்தீனுக்குக் கடன் பட்டிருப்பதைப் போலவே, தமிழும் சமஸ்கிருதத்திற்குக் கடன் பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. தமிழ் தான் ஏற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன், அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு - அவ்வாறே கைவிடுவது ஒன்றினாலேயே - முன்னைய நிலையினும் சிறந்த, உயர் தனிச் செம்மொழியாம் பரு நிலையைப் பெற்று விடும் ."... - என்றும் அவர் கூறுவதன் வாயிலாக அறியலாம். இதன்மூலம், தமிழ்ப் பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்கு களைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளிபெறச் செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ் உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் கால்டுவெல் அவர்களை என்றும் நன்றியுடன் போற்றி வருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 1968ஆம் ஆண்டில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது, 2.1.1968 அன்று சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் டாக்டர் கால்டுவெல் அவர்களின் திருவுருவச்சிலையை நிறுவினோம்.

"செம்மொழி" எனத் தமிழ் மொழிக்கு மணிமகுடம் சூட்டிய மாமேதை டாக்டர் கால்டுவெல் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கோவை மாநகரில் 27.6.2010 அன்று நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் டாக்டர் கால்டுவெல் அவர்கள் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட ஆவன செய்தோம்.

அவற்றைத் தொடர்ந்து, "நெல்லை மாவட்டம், இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவு இல்லமாக மேம்படுத்தப்படும்"" என 4.2.2010 அன்று அறிவித்து, பழைமையான அந்த இல்லத்தைச் செப்பனிட்டுச் சீரமைத்திட 2.3.2010 அன்று 18 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டாக்டர் கால்டுவெல் அவர்கள் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து; அங்கு ஒரு இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய்ச் செலவில் டாக்டர் கால்டுவெல் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்றையும் நிறுவி, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மேம்படுத்தி 17.2.2011 அன்று நான் திறந்து வைத்துப் பெருமிதம் கொண்டேன்.

மேலும், டாக்டர் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் அதுவரை தங்கியிருந்த குருமார்கள் தங்குவதற்காக, புதிய இல்லம் ஒன்றைக் கட்டுவதற்கு 30 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 15.2.2011 அன்று ஆணையிட்டதையும் இவ்வேளையில் நினைவுகூர்ந்து மகிழ்கிறேன்.

எங்கோ பிறந்து, தமிழகத்திற்கு வந்து, சமயத் தொண்டுகளாற்றி, தமிழ் மொழியைக் கற்று, அதன் இன்பத்தில் தோய்ந்து, தமிழ் மொழியில் இயல்பாய் அமைந்து கிடக்கும் மொழியியல் சிறப்பைக் கண்டு வியந்து, தமிழின் மேன்மையை மேதினில் நிலைநாட்டிய மாமேதை டாக்டர் கால்டுவெல் அவர்கள் 1891ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று தாம் ஆற்றி வந்த சமயப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்று; கொடைக்கானல் மலையில் தங்கி வாழ்ந்து, அங்கு 28.8.1891 அன்று மறைவெய்தினார். அவரது உடல், அவர் 50 ஆண்டுகாலம் தங்கியிருந்து சமயத் தொண்டுகள் ஆற்றிய, இடையன்குடியில், அவர் எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அறிஞர் கால்டுவெல் அவர்கள் தமது 77 ஆண்டுகளில் 53 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளால் இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற அந்த மாமேதை கால்டுவெல் பிறந்த 200ஆம் ஆண்டு 7.5.2014 அன்று நிறைவுபெறும் வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத் தமிழ்ச் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம்! வாழ்க கால்டுவெல் அவர்களின் புகழ்!

Related Posts: