தலித்துகளை இழிவுபடுத்திய உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்தியநாத்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிற ஆதித்தியநாத்தின் வருகையொட்டி தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று சொல்லி உத்தரபிரதேச அரசாங்கத்தின் சார்பில் சோப்பும், ஷாம்புவும் வழங்கப்பட்டுள்ளது. இது தலித் மக்களை இழிவுபடுத்தும் செயலாகும். இதற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தொல். திருமாவளவன்
உத்தரபிரதேசத்தில் ஆதித்தியநாத் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மேற்கு உத்தரபிரதேசப் பகுதியில் இருக்கும் சகரன்பூர் என்ற இடத்தில் தலித்துகள் தாக்கப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டு, ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறார். ஆதித்தியநாத்தின் ஆதரவுபெற்ற தாக்கூர் சாதிவெறியர்கள் அந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கும் போடப்பட்டுள்ளது.
சகரன்பூர் வன்முறையைக் கண்டித்து அண்மையில் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் பேரணி நடத்தினர். அதற்குப்பிறகும்கூட பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீடு வழங்கவோ, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவோ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில்தான், தலித்துகள் அசுத்தமானவர்கள் என்று பொருள்படும்படியாக ஆதித்தியநாத் அரசாங்கம் சோப்பும், ஷாம்பும் கொடுத்து அவர்களை இழிவுப்படுத்தியுள்ளது. தங்களை அசுத்தமானவர்கள் எனச் சொல்லி இழிவுபடுத்திய முதலமைச்சர் ஆதித்தியநாத் முதலில் சாதி அழுக்கிலிருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் எனச் சொல்லி அவருக்கு 16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்றை தலித்துகள் இப்போது அனுப்பி வைத்துள்ளனர்.
மத்தியில் பாசக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளன. பெரும்பான்மை பலத்தோடு உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு வகுப்புவாதிகள் இன்னும் வெறிகொண்டு அலைகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுத்துநிறுத்தப்பட வேண்டும். அவர்களை இழிவுபடுத்திய முதல்வர் ஆதித்தியநாத் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்”.
http://kaalaimalar.in/thiruma-sent-an-soap-to-yogi-adityanath/