வியாழன், 25 மே, 2023

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

 

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், திட்டமிட்டே புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான், தலைவராக உள்ளார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது.

புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டி, அதன் திறப்பு விழா வரும் மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த நிகழ்விற்கு, குடியரசுத் தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போதும், அப்போதைய குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த்தும் அழைக்கப்படவில்லை. இப்போது திறப்பு விழாவிற்கு தற்போதுள்ள குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28 ஆம் நாள் என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம். இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும். திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும் என கூறினார்.

பின்னர் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து பாஜகவை தோல்வி அடைய செய்துள்ளார்கள். இது 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் பிரதிபலிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக்கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல. அப்படி அமைந்தால் சனாதனவாதிகளுக்கு தான் வலு சேர்க்கும் என தெரிவித்த திருமாவளவன், கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழா குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்து பேசினார். அப்போது அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படி தான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என கூறினார்.

பின்னர் கள்ளச்சாராய மரணம் குறித்து பேசிய அவர், இதுபோன்ற நிகழ்வுகள் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. அரசு முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி நாங்கள் மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். கள்ளச்சாரயத்தால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி ளித்திருப்பது முதலமைச்சர் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. கள்ளசாரயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்க கூடாது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு
நான் கைக்கோர்ப்பேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா

source https://news7tamil.live/not-inviting-the-president-to-the-inauguration-of-the-new-parliament-building-is-condemnable-thirumavalavan.html