ஞாயிறு, 31 டிசம்பர், 2023

தேர்தலே நடக்கவில்லை.. ஆனாலும் அமைச்சராக பதவியேற்ற வேட்பாளர் – ராஜஸ்தானில் சர்ச்சை

 

ராஜஸ்தானின் கரண்பூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேந்திர பால் சிங் இணையமைச்சராக பதவியேற்ற நிகழ்வு ராஜஸ்தானில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சா்மா தோ்வு செய்யப்பட்டு ராஜ்ஸ்தான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதல்முறை பாஜக எம்எல்ஏவான இவா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றவா். மாநிலத்தின் துணை முதல்வா்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மாநில அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், மூத்த பாஜக தலைவர் கிரோடி லால் மீனா உள்பட 22 பாஜக எம்.எல்.ஏ.க்கள்அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்களில் 12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் ( தனி பொறுப்பு) , 5 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற 22 பேரில் 17
பேர் முதல்முறையாக அமைச்சர்கள் ஆவர்.

புதிய அமைச்சரவையில் கிரோடி லால் மீனா (72) வயதில் மூத்த அமைச்சராகவும், அவினாஷ் கெலாட் (42) இளம் அமைச்சராகவும் உள்ளனர். தற்போது முதல்வர், துணை முதல்வர் உள்பட ராஜஸ்தான் அமைச்சரவையில் மொத்தமாக 25 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 20 பேர் முதல்முறையாக அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர்.

பாஜக வேட்பாளர் அமைச்சராகப் பதவியேற்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் நடத்தப்படாத மீதமுள்ள ஒரு தொகுதியான கரண்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததையடுத்து, அத்தொகுதிக்கான தேர்தல் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அத்தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேந்திர பால் சிங்கும் இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) தற்போது பதவியேற்றுள்ளார்.

இதற்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோத்தஸாரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதவது..

‘கரண்பூர் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சுரேந்திர சிங்கிற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அமைச்சராகப் பதவியேற்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. இதைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று பாஜக மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தவுள்ளது’ என்று குறிப்பிட்டார்.


source https://news7tamil.live/the-election-did-not-take-place-but-the-bjp-candidate-who-was-sworn-in-as-a-minister-controversy-in-rajasthan.html