ஞாயிறு, 24 டிசம்பர், 2023

பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மற்றொரு மல்யுத்த வீரர்!

 

பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மற்றொரு மல்யுத்த வீரரும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தொடர் போராட்டங்களால் பிரிஜ் பூஷன் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பராவார். இதனால் அவரது வெற்றிக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கதறி அழுததுடன், மல்யுத்த விளையாட்டை விட்டே விலகுவதாக தெரிவித்தார். சாக்‌ஷி மாலிக்கின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏறப்படுத்திய சூழலில், தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் அறிவித்தார்.

இந்நிலையில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக  X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

“எனது சகோதரி மற்றும் இந்திய நாட்டின் மகள் சாக்ஷி மாலிக்குக்கு ஆதரவாக நானும் எனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நான் உங்களது மகள் மற்றும் எனது சகோதரி சாக்‌ஷி மாலிக்கை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இந்த விவகாரத்தில் பிரபல விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ரா மற்றும் பல முக்கிய வீரர்கள் தங்களது கருத்தினைத் தெரிவிக்க வேண்டும்.”

இவ்வாறு மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/virender-singh-to-return-padma-shri-after-bajrang-punia.html