வியாழன், 8 ஆகஸ்ட், 2024

அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்” – உச்சநீதிமன்றம்

 

அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் அகர்வால் என்பவருக்கு எதிரான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், “சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை தொடர்ந்து 5000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டிருக்குறது.  இது மிகவும் மோசமான புலன் விசாரணையின் தொடர்ச்சி என்றே காண முடிகிறது” என கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை! - News7 Tamil

மேலும் நீதிபதிகள், “குறிப்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்குகளில் யாரோ ஒரு நபர் அளித்த வாக்குமூலத்தை கொண்டு திருப்தியடைந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கான உரிய ஆதாரம், முகாந்திரம் உள்ளிட்டவற்றை நிரூபிக்க தவறுகிறது.

எனவே புலன் விசாரணயின் தரத்தை அமலாக்கத்துறை அமைப்பானது மேம்படுத்தி கொள்ள வேண்டும்.  ஏனெனில் வாக்குமூலம் கொடுத்த நபர் பின் நாட்களில் அவர் அளித்த வாக்குமூலத்தின் மீது உறுதியாக இருப்பாரா? குறுக்கு விசாரணையை எதிர்கொள்ளும் தன்மையில் இருப்பாரா? என்பது தெரியாது. எனவே இதுபோன்ற வழக்குகளில் அமலாக்கத்துறை அறிவு பூர்வமான புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினர்.


source https://news7tamil.live/executive-should-improve-the-quality-of-its-investigations-supreme-court.html