சனி, 1 நவம்பர், 2025

9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

 

 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் 1 11 2025

தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைச் சட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டம் கடந்த அக்டோபர் 14 முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்டம் உட்பட மொத்தம் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், குறிப்பாக 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைச் சட்டம் மீண்டும் கவனம் பெற்றது.  “இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதியாண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல” எனக் காரணம் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், ஆளுநரின் கருத்தை நிராகரித்த, அந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிதி பொறுப்புடைச் சட்டம் உட்பட மொத்தம் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் தொடர்பான திருத்த மசோதாக்கள்.

கடல் சார் வாரியம் தொடர்பான மசோதா.

தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை வரி திருத்த மசோதாக்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்சி-க்களுக்கான ஓய்வூதிய உயர்வுக்கான தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா.

பல்வேறு வழக்கிழந்த சட்டங்களை நீக்குவதற்கான 2 சட்ட மசோதாக்கள்.    

மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைச் மசோதா என மொத்தம் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/governor-rn-ravi-approves-9-bills-including-finance-bill-of-tamil-nadu-government-10611957