வியாழன், 5 மார்ச், 2026

போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 'இந்தியக் கடற்படையின் விருந்தினரைத் தாக்கி விட்டீர்கள்'- அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

 

போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 'இந்தியக் கடற்படையின் விருந்தினரைத் தாக்கி விட்டீர்கள்'- அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

5 3 2026

Iran warship sunk IRIS Dena frigate Iran US conflict 2026 Sri Lanka coast attack

Visakhapatnam MILAN 2026 | Iran warship sunk | IRIS Dena frigate

இந்தியக் கடற்படை கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் நடத்திய பிரம்மாண்டமான கூட்டுப் பயிற்சியில் (Milan 2026) கலந்துகொண்டு தாயகம் திரும்பிக்கொண்டிருந்த ஈரானின் 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) என்ற போர்ச்சினத்தை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று டார்பிடோ ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது.

இலங்கையின் தெற்கு கடற்கரையான காலே (Galle) பகுதியில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், புதன்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 130 மாலுமிகளுடன் வந்த இந்தக் கப்பல், சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாகச் சென்று கொண்டிருந்தபோது எவ்வித முன்னறிவிப்புமின்றித் தாக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 87 மாலுமிகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 32 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை.

ஈரான் வெளியுறவு அமைச்சரின் ஆவேசம்

இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி (Seyed Abbas Araghchi) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (X) பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"ஈரான் கரையில் இருந்து 2,000 மைல்கள் தொலைவில், கடலில் ஒரு கொடூரமான செயலை அமெரிக்கா செய்துள்ளது. இந்தியக் கடற்படையின் விருந்தினராக வந்த 'டெனா' போர்க்கப்பல், சர்வதேச கடல் எல்லையில் எந்த எச்சரிக்கையுமின்றித் தாக்கப்பட்டுள்ளது. எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: அமெரிக்கா தான் செய்த இந்தச் செயலுக்காகப் பின்னாளில் கசப்புடன் வருத்தப்படும்."

மறுபுறம், அமெரிக்கத் தற்காப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடிப்பது இதுவே முதல்முறை. சர்வதேச கடலில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக அந்தக் கப்பல் நினைத்தது. ஆனால், ஒரு டார்பிடோ மூலம் அது 'அமைதியான மரணத்தைச்' சந்தித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் 'டெனா' கொண்டிருந்த பிணைப்பு

மூழ்கடிக்கப்பட்ட 'ஐரிஸ் டெனா' கப்பல் கடந்த பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை ஆய்வுக் கூட்டம் (IFR) மற்றும் மிலன்-2026 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது. அப்போது இந்தியக் கடற்படை அந்தக் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தது. இந்தியப் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பும் வழியிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

இந்தத் தாக்குதல் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் இப்போது இந்தியப் பெருங்கடல் வரை பரவியிருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இந்தியக் கடற்படை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

source https://tamil.indianexpress.com/india/iran-warship-sunk-iris-dena-frigate-iran-us-conflict-2026-sri-lanka-coast-attack-11177095