/indian-express-tamil/media/media_files/2026/03/24/mohammad-bagher-zolghadr-ali-larijani-2026-03-24-18-21-39.jpg)
அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டார், இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, அவருக்குப் பதிலாக ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதி ஒருவரை தெஹ்ரான் நியமித்துள்ளது.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சி, புதிய செயலாளராக முகமது பாகர் சொல்காதிர் என்பவரை அடையாளம் காட்டியுள்ளது. சொல்காதிர் புரட்சிகர காவல்படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவியை வகித்தவர் மற்றும் ஈரானின் 'எக்ஸ்பீடியன்சி கவுன்சில்' செயலாளராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அலி லாரிஜானி
போர் தொடங்கிய உடனே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 67 வயதான லாரிஜானி நாட்டை வழிநடத்தி வருவதாக பரவலாக நம்பப்பட்டது. ஈரானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான அவர், தெஹ்ரான் ஆட்சியின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தார். மிதவாதிகள், சீர்திருத்தவாதிகள் முதல் தீவிரப்போக்குடையவர்கள் மற்றும் ஐ.ஆர்.ஜி.சி (IRGC) வரை அனைவருடனும் இணைந்து செயல்படும் திறன் கொண்டவர்.
அதேசமயம் அமெரிக்க மற்றும் மேற்கத்திய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நுணுக்கமான ஆற்றலும் அவரிடம் இருந்தது. மேற்கத்திய நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியதற்காக அவர் நன்கு அறியப்பட்டவர்.
போர்க் களத்தில் நடப்பது என்ன?
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறி போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த சமிக்ஞைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட போதிலும், மேற்கு ஆசிய மோதல் நீடித்து வருகிறது. இன்று (மார்ச் 24) ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் டெல் அவிவ் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பாரசீக வளைகுடாவில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்திற்காக திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணிநேர கெடு விதித்திருந்தார், அவ்வாறு திறக்கவில்லை என்றால், தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார். இருப்பினும், தற்போது அந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்கியுள்ளார். 24 3 2026
இது குறித்து ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,, அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும், "நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாள போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறியுள்ளார். இதற்கிடையில், அமெரிக்கா போர்நிறுத்தம் குறித்து பரிசீலித்து வரும் வேளையிலும், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/iran-security-chie-mohammad-bagher-zolghadr-ali-larijani-replacement-11259829





