சனி, 10 டிசம்பர், 2016

விண்வெளியில் இருக்கும் குப்பைகளை மிகப்பெரிய மீன்வலை மூலம் அகற்றும் ஜப்பான்

பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை ராக்கெட் மூலம் ஜப்பான் விண்வெளிக்கு ஏவியுள்ளது. 
ஜப்பானின் தெற்குப்பகுதியில் உள்ள டேனிகாஷிமா தீவில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. அந்த ராக்கெட்டில் உள்ள மிகப்பெரிய மீன்வலை மூலம் விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் கைவிடப்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1957ம் ஆண்டு முதன்முதலாக சோவியத் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற ஏவுகணையை விண்வெளிக்கு ஏவியது. அதுமுதல் தற்போது வரை பல்வேறு நாடுகளும் விண்வெளிக்கு ஏவுகணைகளை ஏவி வருகின்றன. அவற்றின் பயன்பாடு முடிந்து கைவிடப்பட்ட ஏவுகணைகள் முதல் பல்வேறு பொருட்களும் பூமியை சுற்றி வருகின்றன.
இந்நிலையில் அவற்றை அப்புறப்படுத்த விண்வெளிக்குக் கொண்டு செல்லப்படும் வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.