திங்கள், 21 பிப்ரவரி, 2022

பட்டியலின பெண் விவகாரம்: தீட்சிதர்களை கைது செய்ய கோரி டி.ஜி.பி.,க்கு சிபிஎம் கடிதம்

 20 2 2022 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வழிப்பட சென்ற பட்டியலின பெண்ணிடம் தகராறு செய்த தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தீட்சிதர்களை இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் டி.ஜி.பி.,க்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 13 ம் தேதி தரிசனத்திற்கு சென்ற ஜெயஷீலா என்ற பட்டியலின பெண்ணை, தீட்சிதர்கள் ஜாதி பெயரை சொல்லி திட்டி தாக்கினர்.

இது ஒரு அப்பட்டமான தீண்டாமை சம்பவம். இச்சம்பத்தில் தொடர்புடை தீட்சிதர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்து 6 நாட்கள் ஆகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.

இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டியலின பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cpm-seeks-arrest-of-20-chidambaram-temple-priests-for-assaulting-dalit-women-414233/