திங்கள், 21 பிப்ரவரி, 2022

பெண் போலீசின் போனை பறித்த திமுக பிரமுகர்;

 20 2 2022 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று சுமூகமாக முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22 ஆம் தேதி 268 மையங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி 115வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரியின் கணவரும் தி.மு.க. 115-வது வட்டத்தின் வட்ட செயலாளருமான ஜி.வெங்கடேஷ் வாக்கு சாவடியில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் தகராறிலும் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

திருவல்லிக்கேணி Immaculate பள்ளியில் இருந்த வாக்குச்சாவடிக்கு வந்த வெங்கடேஷை, செல்போனுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அங்கிருந்த காவலர்களுடன் வெங்கடேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை, பெண் காவலரான ரேவதி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த வெங்கடேஷ் செல்போனை பிடுங்கி, அவரை மிரட்ட தொடங்கினார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்தத்தில் பதிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் 115-வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரியின் கணவரும், வட்ட செயலாளருமான வெங்கடேஷ் கள்ள ஓட்டு போட முயன்றதை தடுத்து, அதை Phone-ல் பதிவு செய்து, கடமையாற்றிய பெண் காவலரை, ஏளனமாக ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடமிருந்து போனை பிடுங்கிய அராஜக செயல்”என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், திருவல்லிக்கேணியில் வாக்குச்சாவடியில் எடுக்கப்பட்ட வீடியோவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ”திருவல்லிக்கேணியில் திமுகவினர் காவல்துறையினரையும், தேர்தல் அதிகாரிகளையும் மிரட்டி ஓட்டு பதிவு செய்யும் அராஜகம். காவல்துறை அதிகாரியை டிரான்ஸ்பர் செய்துவிடுவேன், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவோம் என மிரட்டும் திமுக எத்தனை ஊடகங்கள் இதை பற்றி பேசுகின்றனர் என பார்ப்போம்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-members-seizes-female-police-mobile-at-polling-booth-video-414260/