வியாழன், 17 பிப்ரவரி, 2022

பட்ஜெட்; எண்களின் ஜாலவித்தை

 16 2 2022 P Chidambaram ப சிதம்பரம்

Magic (black) with numbers: இந்திய பிரதமர் திரு. மோடி மற்றும் அவரது நிதியமைச்சர் ஒரு காலத்தில் தனியார் துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். விவசாயம் மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் மோடி தனியார் துறையை  மையப்படுத்தும் வளர்ச்சியை விரும்பினார். வேளாண்மை மற்றும் தொழில் துறைகளை ஒட்டுமொத்தமாக தனியாரிடம் விட்டு விட்டு தேவைப்படும் போது மட்டும் தலையிட்டால் போதும் என்று அவர் தீர்மானித்திருந்தார்.

ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின்  மோடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது போலவே தெரிகிறது. தனியார் துறை மீது அவர் வைத்த நம்பிக்கை வீண் போன பிறகு அரசு சார்ந்த துறைகளின் மூலம் வளர்ச்சிக்கான காரணிகளை முன்னிலைப் படுத்துபவராக மாறி விட்டார். தற்போது அவர் அரசு தாக்கல் செய்திருக்கும் நிதி நிலை வரவு செலவு அறிக்கை அதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கை முழுவதும் அரசு எந்திரத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. அதாவது அரசின் மூலதன செலவுகளை அதிகப்படுத்தி அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது. ஆனால் இந்த நோக்கம் அரசு தரும் எண்களின் எண்ணிக்கையில் எங்கோ ஒரு நெருடல் உள்ளது.

மாறும் திசை

கடந்த 2021 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட மூலதன செலவுகள் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சர் கூறுகிறார். அதன்படி மொத்த மூலதன செலவு ரூ. 554236  கோடி.  இதை படித்த  பிறகு ஏற்பட்ட ஆச்சரியங்கள் பின்னர் கசப்பாகி விட்டன.  அரசின் பொறுப்பில் இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கடனையும் மூலதன செலவுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த தொகை மட்டுமே ரூ. 51971 கோடிகள். கடன் அடைப்பதற்கான பணம் எப்படி மூலதன செலவாக இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.இந்த தொகையை மொத்த மூலதன செலவிலிருந்து கழித்து விட்டால் மொத்த  மூலதன செலவு 2021-22 ஆண்டுக்கு வெறும் ரூ. 550840 கோடி. இது நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்ததை விட குறைவாகும்.

இதையும் படியுங்கள்: வேலையும் இல்லை, நலத்திட்டங்களும் இல்லை; தேவையா செல்வக்குவிப்பு?

இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அரசு மூலதன கணக்கில் செலவிட பல்வேறு நிலைகளில் செயல்பட வேண்டும். கோப்புகளை கையாளுவதில் நுட்பம், அதை சரியான முறையில் அதை செயல் படுத்துவதில்  அறிவார்ந்தும்  செயல்பட வேண்டும். அரசின் நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிட பிரதமர் விரும்புவதால் மட்டுமே அரசின் பாரம்பரிய நிர்வாக முறைகளை மறைக்க முடியாது.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமே வெறும் மாயாஜால எண்கள் தான். அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மூலதன செலவுகளுக்காக வட்டியில்லாமல் மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கி கொள்ள மத்திய நிதி அமைச்சர் பெருந்தன்மையாக அறிவித்திருந்தார். ஆனால் அதன் விளைவுகளை விரைவிலேயே மாநில அரசுகள் புரிந்து கொள்ள நேரிட்டது. அதாவது மார்க்கெட்டில் மாநில அரசுகள் கடன் வாங்கலாம்.இதில் அசலை தவிர வட்டியை மட்டுமே மத்திய அரசு செலுத்தும். அசல் தொகையை  மாநில அரசுகள் தான் செலுத்த வேண்டும். இதில் ஒரு கசப்பான உண்மை இருக்கிறது. மாநில அரசு வாங்க அனுமதித்த கடன் தொகையையும் 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டின் மொத்த மூலதன செலவில் மத்திய அரசு இணைத்துக் கொண்டு விட்டது தான்.  இப்படி செய்துவிட்டு கடந்த ஆண்டை விட மூலதன செலவை 35 சதவீதம் அதிகரிப்பதாக மார் தட்டிக் கொள்வது தான் ஆச்சரியம்.  இதை ஒரு வாதமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு மோசடியாகவே நினைக்க முடியும். மொத்த மூலதன செலவில் ஒரு லட்சம் கோடியை கழித்து விட்டால் 2022-23 ன் பட்ஜெட் மதிப்பீட்டுத் தொடக்க ரூ. 650246 கோடியாகி விடும். இது பட்ஜெட்டின் திருத்தப் பட்ட மதிப்பை விட ஒரு லட்சம் கோடி மட்டுமே அதிகமாக இருக்கும்.

குறைந்து வரும் நம்பிக்கை

அரசாங்கத்தின் மூலதன செலவை அதிகப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக மோடி அரசு சொல்வது அதிகப்படியான மிகைப்படுத்தப்பட்ட ஒரு கருத்து. இது தவிர மேலும் மேலும் அதிகப்படியாக முதலீடு செய்ய தனியார் துறையினர் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையும் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.அரசு துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்க அரசு செய்த முயற்சிகளுக்கும் எந்த பலனும் இல்லை. பி பி சி எல் , சி சி எல், எஸ் சி ஐ போன்ற அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்க அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவெடுத்தது. இது மட்டுமல்லாமல் இரண்டு அரசு வங்கிகள், ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இரண்டையும் தனியாருக்கு விற்க அரசு ஆர்வம் காட்டியது.

இது மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட்டு ரூ. 6 லட்சம் கோடி திரட்டும் ஒரு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் கடந்த ஆண்டு அறிவித்தார். ஆனால் அதை அரசால் நிறைவேற்ற முடியவில்லை.  

அடுத்ததாக அரசின் ரயில்வே துறை 109 வழித்தடங்களில் 151 பயணிகள் ரயில் சேவையை தொடங்கி கொள்ள தனியார் துறையினர் ஏலம் கேட்கலாம் என ஒரு திட்டத்தை அறிவித்தது. ஆனால் ஒருவர் கூட இதில் ஆர்வம் காட்டவில்லை, ஏலம் கேட்கவும் வரவில்லை.

அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 175000 கோடி திரட்ட கடந்த 2021-22 பட்ஜெட்டில் அரசு அறிவித்த திருத்த மதிப்பீட்டுக்கு எதிராக தற்போது வெறும் ரூ. 78000 கோடி மட்டுமே அரசால் திரட்ட முடியும். அதுவும் திட்டமிட்டபடி இந்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர்  எல் ஐ சி நிறுவன பங்குகளை வெற்றிகரமாக விற்றால் மட்டுமே இது சாத்தியம்.

தனியார் துறையினர் ஒரு தொழிலில் மூலதனம் செய்ய தயங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் முதல் முக்கிய காரணம் பொருட்கள் மீதான தேவை குறைந்தது வருவதாகும்.  தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களின் உண்மையான தேவை அதில் பாதி தான் என்பதை உணர்ந்த பின்பும் அதிக முதலீடுகளில் தனியார் துறையினர் கவனம் செலுத்த மாட்டார்கள். இந்த உற்பத்தியில் பாதிப் பொருட்களை விற்பதற்கே நிறுவனங்களுக்கு மூச்சு வாங்குகிறது. நிலைமை இப்படியிருக்க மேலும் அதிகப்படியாக உற்பத்தி செய்ய யார்தான் முன்வருவார்கள்?  இந்த அரசில் ஒரு தொழில் செய்வதற்கான சூழல்  மேலும் மேலும் கடினமாகி கொண்டே வருகிறது. அரசு தமக்கு ஆதரவு நிறுவனங்களுக்கு மட்டுமே நேசக்கரம் நீட்டுகிறது. மற்ற நிறுவனங்கள் அரசின் நிலைப்பாட்டால் குழப்பத்திலும் பயத்திலும் நாட்களை நகர்த்துகின்றன.

புறக்கணிக்கப்படும் ஆலோசனைகள்

வேலையில்லாத் திண்டாட்டம், மந்தமான பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிலிருந்து  அரசை மீட்க பொருளாதார நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு  அறிவுறுத்தியுள்ளனர்.  இப்போது அவற்றை பார்க்கலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் பணம் வரவு செய்யப் பட வேண்டும். மறைமுக வரிகளை குறைக்க வேண்டும்.

நலிவடைந்து மூடப்பட்டிருக்கும் சிறிய நிறுவனங்கள் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும். இதனால் மீண்டும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.

சமூக நலத்திட்டங்களை மேலும் அதிக நிதி ஒதுக்க பட வேண்டும். செலவுக்கு அரசிடம் பணமில்லை என்ற பல்லவி இனி வேண்டாம். இந்திய மக்களில் 10 சதவீத மக்கள் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் 57 சதவீதத்தை லாபமாகவும், 77 சதவீத சொத்துக்களை தமது சொத்துக்களாகவும் வைத்திருப்பதாக  புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இத்தனை சொத்துக்களை வைத்திருக்கும் இந்த முதலாளிகள் தாங்களே முன்வந்து அமெரிக்க கோடீஸ்வரர்கள் போல எங்களுக்கு அதிக வரி  விதியுங்கள் என்று கேட்க வேண்டும்.

தற்போது உயிரோட்டம் பெற்றிருக்கும் லைசன்ஸ் ராஜ் கட்டுப்பாடுகளை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். தடையில்லாமல் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.  இந்திய ரிசர்வ் வாங்கி, செபி, வருமான வரித்துறையின் குறுக்கீடுகள் தேவையில்லாத இடையூறுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

மத்திய புலனாய்வு நிறுவனம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, எஸ் எப் ஐ ஓ போன்ற அரசு புலனாய்வு அமைப்புகள் தொழில் நிறுவனங்களிலும், வங்கி பரிவர்த்தனைகளிலும் தலையிடுவது குறைக்கப்பட வேண்டும்

மேற்கண்ட ஆக்கபூர்வமான அறிவுரைகளை அரசு கேட்டு நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது ஒரு புறம் இருந்தாலும்  இன்னமும் பொருளாதார நிபுணர்களை குழப்பத்திலும் புதிரிலும் ஆழ்த்தி வரும் ஒரு விஷயத்துக்கு வருகிறேன். இதற்கு மத்திய நிதி அமைச்சர் விளக்கம் தர வேண்டும். வரும் 2022-23 பட்ஜெட்டின் படி இந்தியாவின் நோக்க உற்பத்தி 11.1 சதவீதமாகவும், உண்மையில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாகவும், புதிய நிதிநிலை தலைமை பொருளாதார ஆலோசகரின் திட்டமாக அரசு  எதிர்பார்க்கிறது. நிலைமை இப்படி இருக்கும் நிலையில் பணவீக்கமும் 3 சதவீதமாகி விட்டால் இந்திய பொருளாதாரம் சொர்க்கபுரியாக திகழும்.

தமிழில் த. வளவன்

source https://tamil.indianexpress.com/opinion/chidambaram-writes-private-sector-sitharaman-modi-government-capital-expenditure-budget-412070/