திங்கள், 28 பிப்ரவரி, 2022

ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா; தேஜஸ்வி வருகை

 

Tejashwi attend Stalin’s Book release event in Chennai: 28 2 2022 சென்னையில் நடைபெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தேஜஸ்வி யாதவ், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஷியாம் ரஜக் தெரிவித்தார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது அரசியல் பயணம் குறித்து எழுதிய புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள உள்ள நிலையில் தற்போது தேஜஸ்வி யாதவ்வும் கலந்து கொள்கிறார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் வாரிசாகக் கருதப்படும் தேஜஸ்வி, பிராந்தியக் கட்சிகளின் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து வரும் திமுக தலைவரைச் சந்திக்க வருவதால், அவரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேஜஸ்வி யாதவ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்தார்.

காங்கிரஸின் சீட் பகிர்வு கோரிக்கையை புறக்கணித்து, வரவிருக்கும் கவுன்சில் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட ஆர்ஜேடி முயற்சித்து வருவது, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பீகாரில் மிகப்பெரிய கட்சியாக தன்னை நிலைநிறுத்துவதில் அக்கட்சி எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) எதிராகப் போராட திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல பிராந்தியக் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும் மூன்றாவது அணியில் சேர தேஜஸ்வி ஆர்வமாக இருப்பதாக ஊகங்கள் உள்ளன. “தேஜஸ்வி நிச்சயமாக டிஎம்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் உட்பட முக்கிய பிராந்திய தலைவர்களுடன் தனது உறவை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய தலைவராக தனது இமேஜை அதிகரிக்க முயற்சிக்கிறார்” என்று மூத்த ஆர்ஜேடி தலைவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tejashwi-attend-stalins-book-release-event-in-chennai-417867/