திங்கள், 25 ஜூலை, 2022

இந்தியாவில் பரவும் குரங்கு அம்மை; அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?

 

24 7 2022 

Anonna Dutt

Explained: After global outbreak, monkeypox has now reached Delhi, this is what you need to know about the disease: கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நோயின் நான்காவது பாதிப்பு ஆகும். அதைவிட முக்கியமாக, டெல்லியில் தொற்று ஏற்பட்ட நோயாளி சர்வதேச பயணம் எதுவும் மேற்கொள்ளாதவர். எனவே இது, சர்வதேச பயணத்தின் வரலாறு இல்லாத முதல் பாதிப்பு இதுவாகும்.

டெல்லியில் பாதிக்கப்பட்ட நோயாளி யார்?

மேற்கு டெல்லியைச் சேர்ந்த 31 வயது நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டு வார காய்ச்சல் மற்றும் தோல் தடிப்பு (தோலில் கொப்பளங்கள்) அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். “அவருக்கு குரங்கு அம்மை இருப்பதாக நாங்கள் சந்தேகித்து, அவரை மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தோம். தற்போது அவருக்கு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: Explained: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இலங்கை பிரதமர் குடும்பம்!

அவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது?

அந்த நபர் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்யவில்லை. ஆனால் அவர் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு இமாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்தார். இந்தியாவில் முந்தைய மூன்று பாதிப்புகளும்  சர்வதேச பயண வரலாறு கொண்டவை. அவை கேரளாவில் கண்டறியப்பட்டவை. அவர்களுக்கு சர்வதேச பயணம் காரணமாக தொற்று இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் டெல்லியில் உள்ள பாதிப்பு இந்தியாவிற்குள் தொற்று பரவுவதைக் குறிக்கிறது.

குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது?

குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது முக்கியமாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அதேநேரம் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவல் என்பது, பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு மூலம் மற்றொருவருக்கு பரவுகிறது. இருப்பினும், ஆண்களுடன் (MSM) உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்த நோய் பாலியல் ரீதியாக பரவுகிறதா என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாலியல் மூலம் பரவும் சாத்தியக்கூறுகளைத் தவிர, மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவுவது என்பது முதன்மையாக பெரிய சுவாசத் துளிகள் மூலம் நிகழ்கிறது. குரங்கு அம்மை தொற்றானது, உடல் திரவங்கள் அல்லது காயங்கள் போன்ற நேரடித் தொடர்பு மூலமாகவும், புண்கள் துடைக்கப்பட்ட பொருட்களான அசுத்தமான ஆடை அல்லது துணி போன்றவற்றுடன் மறைமுகத் தொடர்பு மூலமாகவும் பரவுகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மை வைரஸ் ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும், இது பெரியம்மைக்கு காரணமான வேரியோலா வைரஸ் மற்றும் பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி வைரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வைரஸ்களின் இனமாகும். குரங்கு அம்மை பெரியம்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, இருப்பினும் அவை தீவிரம் குறைவாக இருக்கும்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள், இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் அம்மை தோல் தடிப்புகள் ஆகியவை குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகளாகும். நோய்த்தொற்றின் சிக்கல்களில் நிமோனியா, இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், குழப்பம் மற்றும் கண் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.

நோயால் இறப்பு ஏற்படுமா?

குரங்கு அம்மை என்பது பெரும்பாலும் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் நோயாகும். அதாவது அது தானே தீர்ந்து விடும், மேலும் நோயாளியின் ஆரோக்கியத்தில் நீண்ட கால தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட பெரும்பாலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, கடுமையான நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், இது குறிப்பாக குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு மரணத்திற்கு வழிவகுக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரள மாநிலத்திற்கு வந்தவர்களில் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பாதிப்பு எவ்வளவு மோசமானது?

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலை என்று சனிக்கிழமை அறிவித்தது. உலகில் 75 நாடுகளில் இருந்து 16,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், கடந்த தசாப்தங்களாக வயதான இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பெரியம்மை தடுப்பூசி, குரங்கு அம்மைக்கு எதிராக செயல்படுகிறது, மேலும் நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்தியாவில் பெரியம்மை நோய் 1977 இல் ஒழிக்கப்பட்டது.

source https://tamil.indianexpress.com/explained/explained-monkeypox-all-you-need-to-know-483938/