செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!

 

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும்
மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு
வருகின்றனர்.

இந்நிலையில் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதே போல் மற்றொரு படகில் 23ஆம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இரண்டு விசைப்படகுகளிலும் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 22 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரண்டு
படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றனர்.

மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு படகுகள் மற்றும் மீனவர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


source https://news7tamil.live/22-fishermen-from-tamil-nadu-arrested-by-sri-lankan-navy-2-boats-seized.html