செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு!

 

New Coimbator

கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற தொழிற்சங்க அமைப்பாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிடம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரிப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், LPF, INTUC, AITUC, HMS, MLF ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த 4 சட்ட தொகுப்புகள் தொழிலாளர்களின் வேலை ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளை, பறிப்பதாகவும் அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை கைவிட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முற்பட்டபோது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. முன்னதாக தேசிய கொடி ஏற்றப்பட்டு அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-coimbatore-trade-unions-protest-against-central-government-6852788