இந்த நிமிடத்தின் பரபரப்புச் செய்தியாகியுள்ளது லிஜியன் ஹேக்கர் குழு. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள் பர்கா தத், ராவிஷ் குமார் ஆகியோரின் டிவிட்டர் ஐடியை ஹேக் செய்தது தாங்கள்தான் என தெரிவித்துள்ள இந்தக் குழு, சென்னை அப்போலோ மருத்துவமனையிலிருந்து மதிப்புமிக்க பல தகவல்களை திருடியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவல்களை வெளியிட்டால் இந்திய அளவில் பெரிய பிரளயமே ஏற்படும் என வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கிறது இக்குழு.
யார் இந்த லிஜியன்?
“நாங்கள் லிஜியன்; நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்; எங்களை எதிர்பாருங்கள்” என்ற வாசகத்துடன் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் இவர்கள், இந்தியாவில் இதுவரை 40 ஆயிரம் சர்வர்களில் புகுந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். “எங்களுக்கு நோக்கமெல்லாம் இல்லை, எங்களுக்கு யாரை ஹேக் செய்யத் தோன்றுகிறதோ அவர்களை ஹேக் செய்வோம்” என்று இவர்கள் சொன்னாலும் வெளிப்படையாகத் தெரியும் விஷயம், இந்த ஹேக்கர் குழு பாஜக அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வது தெரியும்.
அரசை விமர்சிப்பவர்களை குறிவைக்கிறது!
பொதுவாக ஹேக்கர் குழுக்கள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மோசடிகளை வெளிக்கொண்டுவருவதற்காக செயல்படுவதைப் பார்த்திருக்கிறோம். இந்தக் குழு அரசை விமர்சிப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அவர்களுடைய கணக்குகளை ஹேக் செய்துகொண்டிருக்கிறது. என்டிடீவி இந்தி செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் ராவிஷ் குமார், மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வருபவர். அதுபோல பத்திரிகையாளர் பர்கா தத், பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார். காங்கிரஸ் துணை தலைவர் ட்விட்டர் ஐடியை ஜேக் செய்த இக்குழு பாஜக ட்ரால்களைப் போல ராகுலை அநாகரிகமான அவருடைய பக்கத்திலேயே எழுதியது. விஜய் மல்லையாவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தபோதும் அதனால் விளைந்த நன்மை என்று குறிப்பிட ஒன்றுமில்லை. மொத்தத்தில் பாஜக ட்ரோல்களே ஹேக்கர்களாக அவதாரம் எடுத்திருக்ககூடும் என்பதற்கு ஆதாரங்கள் கூடுகின்றன.
அப்போலோவில் திருடிய தகவல்களை ஏன் வெளியிடவில்லை?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின் தமிழக அரசியல் வெற்றிடம் ஏற்படும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். இந்நிலையில் அவர்கள் எதிர்பார்த்த அரசியல் அதிரடிகள் எவையும் தமிழக அரசியல் நடக்கவில்லை. அதிமுக ‘சின்னம்மா’ தலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்களே அதுகுறித்து எவ்வித எதிர்வினையும் செய்யவில்லை. இந்நிலையில் தான் இந்த ஹேக்கர் குழு, அதிரடியாக அப்போலோ தகவல்களை வசப்படுத்தியிருக்கிறோம், அதைவெளியிட்டால் இந்திய அரசியலில் குழப்பம் உண்டாகும் என அறிவித்திருக்கிறது. இது அதிமுக தலைமைக்கு விடுபட்ட மறைமுக மிரட்டலாகவே உள்ளது.