செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

வாக்கு வங்கியும் சாதிவாரி கணக்கெடுப்பும்

 பிற காரணங்களைத் தவிர, இதர பின்தங்கிய வகுப்பினர் மத்தியில் குறிப்பிடத்தக்க வகையில் பாஜக செல்வாக்கை பெற்றதன் விளைவாக 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதர சாதியினரின் வாக்குகளை பாஜக பெறவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் பாரம்பரிய வாக்காளர்கள், உயர் சாதியினர், உயர் வர்க்கத்தினரின் வாக்குகளைத் தாண்டியும், பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடிகளின் வாக்குகளையும் கணிசமாக பாஜகவால் திரட்ட முடிந்துள்ளது. இருப்பினும், பாஜக தலைமையிலான மத்திய அரசு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தயக்கம் காட்டுவதாகத் தோன்றினாலும், இது அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாகத் தெரிகிறது.

ஓ.பி.சி. ஆதரவு

வி.பி.சிங் அரசால் 1990களின் முற்பாதியில் அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு வழங்கியது. இது இந்தியாவின் தேர்தல் அரசியலின் தன்மையை மாற்றியது. குறிப்பாக வட இந்தியாவில். மண்டேல் கமிஷன் அரசியலுக்கு பிறகு, மிகவும் வலுவான பிராந்திய கட்சிகள் அதிக அளவில் உருவானது. குறிப்பாக உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில். 1990 களின் பிற்பகுதியில் “கமண்டல் அரசியல்” என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட மண்டல் அரசியலை அதன் இந்துத்துவா அரசியலுடன் எதிர்கொள்ள பாஜக மிகவும் கடினமாக போராட வேண்டியிருந்தது மற்றும் அதற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. எல்.கே. அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் பாஜக மிகவும் கடினமாக உழைத்து 1998 மற்றும் 99 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனாலும் பிராந்திய கட்சிகள் மிகவும் வலுவாக இருந்தன. 35.5% மற்றும் 33.9% என்பது இரண்டு தேர்தல்களிலும் பிராந்திய கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம். 2004 மற்றும் 2009 இல் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் அமைத்தபோது கூட, பிராந்திய கட்சிகள் ஒன்றாக முறையே 39.3% மற்றும் 37.3% வாக்குகளைப் பெற்றன. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும் கூட பிராந்திய கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு வங்கி 39% ஆக இருந்தது.

2019ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக ஓ.பி.சி. பிரிவினரிடையே செல்வாக்கை பெரிய அளவில் பெற்று, பிராந்திய கட்சிகளின் முக்கிய ஆதரவு தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் வாக்கு விகிதம் 26.4%ஆக குறைந்தது. லோக்நிதி-சிஎஸ்டிகளின் தொடர்ச்சியான கணக்கெடுப்புகளின் சான்றுகள், கடந்த ஒரு தசாப்தத்தில் ஓபிசி வாக்காளர்களிடையே பாஜக பெரும் செல்வாக்கை பெற்றுள்ளடு என்று கூறுகின்றன. 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 22% ஓ.பி.சிக்களின் வாக்குகள் பாஜகவிற்கு சென்றன. அதே சமயத்தில் 42% வாக்குகள் பிராந்திய கட்சிகளுக்கு சென்றன. ஆனால் 10 ஆண்டுகளுக்குள், ஓபிசி மத்தியில் பாஜகவின் ஆதரவுத் தளம் அதிகம் மாறியுள்ளது. . 2019 மக்களவைத் தேர்தலின் போது, 44% ஓ.பி.சி. பிரிவினர் பாஜகவிற்கு வாக்களித்தனர். 27% மட்டுமே பிராந்திய கட்சிகளுக்கு வாக்களித்தனர்.

BJP vote share and caste census

நாடாளுமன்றம் vs சட்டமன்றம்

ஆனால் இங்கே ஒரு சிறிய மாற்றம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது ஓ.பி.சி. பிரிவினரின் பிரபல தேர்வு பாஜகவாக உள்ளது. ஆனால் மாநில தேர்தல்கள் என்று வரும் போது நிலைமை அப்படியாக இருப்பதில்லை. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது 11% ஓ.பி.சியினர் மட்டுமே பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 29% ஓ.பி.சியினர் இந்த கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 2019ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் 14% ஓ.பி.சியினர் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 29% பேர் அக்கட்சிக்கு வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு இடையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஓ.பி.சிகளின் வாக்களிக்கும் தேர்வுகளில் இதே போன்ற வித்தியாசத்தை நாம் காண்கின்றோம்.

வட இந்தியாவில் ஆதிக்க ஓ.பி.சி. பிரிவினரின் வாக்குகளோடு ஒப்பிடும் போது, பாஜக ஓ.பி.சி. பட்டியலில் கீழ் நிலையில் இருக்கும் பிரிவினரின் வாக்குகளை அதிக அளவில் பெற்றுள்ளது. எனவே, அப்பிரிவினரிடையே பாஜக அரசியல் நன்மைகளைப் பெற்றுக்கொண்டாலும், அவர்களிடையே, உயர் வகுப்பினர் மற்றும் உயர் சாதியினரிடம் காணப்படும் உறுதியான ஆதரவு தளம் இல்லை. பாஜகவின் தேர்தல் செயல்திறனைப் பொருட்படுத்தாமல் அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் இந்த உயர் சாதியினர் மற்றும் உயர் வர்க்கத்தினர். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது மேல்நிலை ஓ.பி.சிக்களில் 41% மட்டுமே பாஜகவிற்கு வாக்களித்தனர். அதே சமயத்தில் கீழ்நிலையில் இருக்கும் ஓ.பி.சியினரில் 47% பேர் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.

பிராந்திய கட்சியினருக்கு உயர் ஓ.பி.சியினர், கீழ் ஓ.பி.சியினரைக் காட்டிலும் அதிக அளவில் ஆதரவை அளிக்கின்றனர். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரின் யாதவர்கள், அந்த வகையில் ஆதிக்கம் செலுத்தும் ஓபிசி சாதி, சமாஜ்வாடி கட்சி மற்றும் ஆர்ஜேடி ஆகியோருக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர், அதே நேரத்தில் இந்த மாநிலங்களில் தாழ்ந்த ஓபிசி சாதியினரை பாஜக வெற்றிகரமாக திரட்ட முடிந்தது. (அட்டவணைகள் 5 மற்றும் 6)

பல்வேறு சாதியினர், குறிப்பாக ஓபிசி சாதியினர் பற்றி வரக்கூடிய எண்கள், மத்திய அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு தொடர்பாக ஓபிசியை மறுவடிவமைக்க ஆளும் கட்சிக்கு பிராந்திய கட்சிகள் அழுத்தம் கொடுக்க கொடுக்கலாம் என்ற பயத்தினால் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆளும் கட்சி தயக்கம் காட்டி வருகிறது. இது மண்டல் II என்ற சூழ்நிலையை உருவாக்கலாம். கடந்த ஒரு தசாப்தமாக இந்திய தேர்தல் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய பாஜகவை சவால் செய்ய ஒரு நிரலை தேடி வரும் பிராந்திய கட்சிகளுக்கு இது ஒரு புதிய உற்சாகத்தை தருகிறது.

source https://tamil.indianexpress.com/explained/bjp-vote-share-and-caste-census-334957/

Related Posts: