செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா

 தமிழ்நாட்டில், திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவு பூங்காக்கள் உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 08 2021 

சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், சிப்காட் நிறுவனத்தால் நிறுவப்பட உள்ள துறை சார்ந்த பூங்காக்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டிலேயே முதன் முறையாக தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில், ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு அறைகலன் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ள இப்பூங்காவின் திட்டப்பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என்றும், இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில், தோல் பொருட்கள் உற்பத்திக்காக தோல் பொருள் பூங்கா, மத்திய அரசின் பெரும் தோல் காலணி மற்றும் உபகரணங்கள் தொகுப்பு (( Mega Leather Footwear Accessories Cluster )) திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், சிப்காட் நிறுவனம் முதற்கட்டமாக மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்காக்கள் அமைத்து வருவதாகவும் தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4.html