செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உறுதி:

 30 08 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் சூசகமாக தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் உறுதிய அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று குடும்பத் தலைவிகள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சட்டப் பேரவையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். ஆனால், முதலமைச்சர் இது பற்றி எதும் அறிவிக்கவில்லை. இதனிடையே, அதிமுகவினர், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.


இந்த சூழலில்தான், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தபப்டும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ் 29ம் தேதி கொளத்தூர், எவர்வின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால், நீங்களெல்லாரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் என்னுடைய குரலைக் கேட்க வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் தையல் பயிற்சி கொடுத்து, அதனால் ஆயிரம் பேருக்கும் மேல் பயனடையக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. பெண்களுடைய முன்னேற்றத்திற்கு, மகளிருடைய வாழ்விற்கு எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை
இப்போது ஆட்சிக்கு வந்து மட்டுமல்ல, தொடர்ந்து கலைஞருடைய காலத்தில் 5 முறை ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோதும் இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய கழக ஆட்சியின் சார்பில் பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.

பெண்களுடைய முன்னேற்றம்தான் இந்த நாட்டினுடைய முன்னேற்றம். பெண்களுடைய முன்னேற்றம்தான் முக்கியம் என்று கருதி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணினுடைய திருமணச் செலவிற்கு நிதி வழங்கிய ஆட்சிதான் கலைஞருடைய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும்.

தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளைச் சொல்லியிருக்கிறோம். அதில் எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இலவசமாக பயணம் செய்யலாம். இங்கே கூட இந்த சான்றிதழ்களை வாங்க வந்த சகோதரிகளும், தாய்மார்களும் ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி, நாங்களெல்லாம் பேருந்தில் இலவசமாக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சொன்னீர்கள்.

அதேபோல், பெண்கள், நீங்களெல்லாம் தன்மானத்தோடு, சுயமரியாதை உணர்வோடு இருக்கவேண்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 1989ம் ஆண்டு தர்மபுரியில், தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக் குழு என்கிற ஒரு அற்புதமான திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது நான் முதலமைச்சராக பொறுப்பில் இருக்கிறேனென்றால், இன்று இங்கு வந்திருக்கக்கூடிய சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, செந்தில் பாலாஜியாக இருந்தாலும் சரி, நாங்களெல்லாம் அமைச்சர்களாக இன்றைக்கு இருக்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த ஆட்சியை உருவாக்கித் தந்தவர்ககள் நீங்கள்தான்; தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்.

இப்படி பெண்களுடைய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உறுதியாக இந்த ஆட்சி பணியாற்றும்; தேர்தல் நேரத்தில் தந்திருக்கக்கூடிய உறுதிமொழிகளையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற உறுதியை மீண்டும் உங்களுக்கு எடுத்துச்சொல்லி, இன்றைக்கு சான்றிதழை பெற்றிருக்கக்கூடிய நீங்கள் மகிழ்ச்சியோடு அதை வாங்கியிருக்கிறீர்கள். அந்த மகிழ்ச்சி தொடரவேண்டும், அது தொடர்வதற்கான எல்லா முயற்சிகளையும் திமுக ஆட்சி மேற்கொள்ளும் என்ற உறுதியைச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கத்தையும் சொல்லி என் உரையை முடிக்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-hints-to-the-amount-of-incentives-for-women-as-family-heads-337288/