புதுகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 127 ஏக்கர் பரப்பிலான நிலம் மாவட்ட நிர்வாகத்தால் மருத்துவத் துறையிடம் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை முத்துலட்சுமிரெட்டி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் வருவாய் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலமாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை மருத்துவக் கல்லூரி தனி அலுவலரும், முதல்வருமான டி. பரிமளாதேவியிடம் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஒப்படைத்தார்.
புதுகை மாவட்டத்திற்கு ஒரு புதிய அரசு மருத்துவக்கல்லூரி 150 மாணாக்கர்கள் சேர்க்கையுடன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அதனடிப்படையில் கடந்த அக். 24ம் தேதி புதிய மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் பிறகு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு துறைத்தலைவராக பணியாற்றிய டாக்டர் பரிமளாதேவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு புதுகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தனி அலுவலர் மற்றும் முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் மருத்துவக் கல்லூரிக்கான இடம் புதுக்கோட்டை மச்சுவாடி கால்நடை பண்ணையில் சுமார் 127 ஏக்கர் பரப்பிலான நிலம் தேர்வு செய்யப்பட்டு அந்த நிலம் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பை விட புதுக்கோட்டை மாவட்ட புதிய மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
