ஞாயிறு, 17 மே, 2026

ரூபாயின் மதிப்பை உயர்த்த அதிரடி: வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு

 

மத்திய அரசு உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வெள்ளி இறக்குமதியைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன், இதற்கு அரசின் முன்அனுமதியைப் பெறுவதையும் சனிக்கிழமை கட்டாயமாக்கியுள்ளது. அதிகரித்து வரும் சர்வதேச விலைகள் காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரித்து, அந்நியச் செலாவணி வெளிப்பாட்டை ஏற்படுத்தும் விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்காக, கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசியப் பகுதி நெருக்கடிக்கு மத்தியில், அத்தியாவசியமற்ற இந்த இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி சுங்க வரியை 6%-லிருந்து 15% ஆகவும், பிளாட்டினத்திற்கான வரியை 6.4%-லிருந்து 15.4% ஆகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை உயர்த்தியிருந்தது.


இதனைத் தொடர்ந்து, மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதிகளுக்காக வழங்கப்படும் வரி இல்லாத இறக்குமதி சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், முக்கிய ஏற்றுமதித் திட்டம் ஒன்றின் கீழ் தங்கம் இறக்குமதி செய்வதற்கு 100 கிலோ என்ற அளவிலான வரம்பை அதற்கு அடுத்த நாளே அரசு விதித்தது.

வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 99% வரையிலான தூய்மை கொண்ட வெள்ளிப் பாளங்களை உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வது இனி கட்டுப்பாட்டுப் பிரிவின் கீழ் வரும். எனினும், நகை தயாரிப்பு போன்ற செயலாக்கம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளிக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது, அது வழக்கம் போல் தடையின்றி தொடரும்.

அதேபோல், 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் (EOUs) மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZs) அமைந்துள்ள நிறுவனங்கள் செய்யும் இறக்குமதிகளுக்கும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாது. ஆனால், இந்த இறக்குமதி பொருட்கள் உள்நாட்டு வரிப் பகுதியில் (Domestic Tariff Area) விற்பனை செய்யப்படக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்ந்து வரும் வேளையில், அவற்றின் இறக்குமதியும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு ஆசியாவில் தொடங்கியுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், நிச்சயமற்ற உலகளாவிய சூழ்நிலையில் இறக்குமதியைக் குறைத்து அந்நியச் செலாவணியைச் சேமிக்க கடந்த ஒரு வாரமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2025-26 நிதியாண்டில், வெள்ளி இறக்குமதி 150% அதிகரித்து 12.05 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எனினும், அளவின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த உயர்வு 42% மட்டுமே ஆகும் (7,334 டன்கள்). இந்த ஆண்டில் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 74% அதிகரித்துள்ளது இதற்குக் காரணமாகும். இதேபோல், கடந்த நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி அளவு 4.7% குறைந்து 721 டன்களாக இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை 30% உயர்ந்ததால், அதன் மொத்த இறக்குமதி மதிப்பு 24% அதிகரித்து 71.98 பில்லியன் டாலராக எட்டியுள்ளது.

இந்த உலோகங்களுக்கான தேவை ஏப்ரல் மாதத்திலும் வலுவாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 81.7% அதிகரித்து 5.6 பில்லியன் டாலராகவும், வெள்ளியின் இறக்குமதி 157% அதிகரித்து 411 மில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருப்பதால், எரிசக்தி விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தங்கம் மற்றும் வெள்ளிக்கான வரி உயர்த்தப்பட்ட போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். "இத்தகைய சூழ்நிலைகளில், நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத் துறையை விவேகத்துடன் கையாள்வது அவசியமாகிறது" என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். விலைமதிப்பற்ற உலோகங்கள் கலாச்சார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், அவை "முதன்மையாக நுகர்வு மற்றும் முதலீட்டு நோக்கங்களை மட்டுமே சார்ந்தவை" என்றும், இத்தகைய இறக்குமதிகளால் "அந்நியச் செலாவணி பெருமளவில் வெளியேறுகிறது" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது நாட்டின் இறக்குமதிச் செலவை மேலும் சுமையாக்கியுள்ளது. எனவே, இந்தியாவின் அந்நியச் செலாவணி வளங்களை கச்சா எண்ணெய், உரங்கள், தொழில்துறை மூலப்பொருட்கள், பாதுகாப்புத் தேவைகள், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். கடந்த சில ஆண்டுகளாக, விலைமதிப்பற்ற உலோகங்களின் அதிகப்படியான இறக்குமதி மற்றும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவிலிருந்து கணிசமான அந்நியச் செலாவணி வெளியேறியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு ஆசியப் போருக்கு மத்தியில் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை மீதான அழுத்தம் கடுமையாக உணரப்பட்டுள்ளது. போர் தொடங்கிய 10 வாரங்களில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 32 பில்லியன் டாலர் சரிந்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாகவே நீடித்து வருகிறது.

source https://tamil.indianexpress.com/business/govt-restricts-silver-imports-for-domestic-use-to-curb-forex-outflow-amid-west-asia-crisis-11844141