புதன், 27 மே, 2026

பண மோசடி வழக்கு: பினராயி விஜயன் வீட்டில் இறங்கிய இ.டி

 ed

கனிமவள மோசடி வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் (CMRL), பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திற்கு எந்தவொரு சேவையையும் வழங்காத நிலையிலும், பணம் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் துவங்கியது. அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சி.எம்.ஆர்.எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கேரள உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

pina

இந்நிலையில், திருவனந்தரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீடு உட்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது. கேரள தேர்தல் மாநாடு ஒன்றின்போது ​​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கேரள முதலமைச்சரை பா.ஜ.க ஏன் தாக்குவதில்லை என்று நான் கேரள மக்களிடம் கேட்க விரும்புகிறேன். முதலமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு ஏன் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்கிறது? இது பா.ஜ.க-வுக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான கூட்டுச் சதிக்கு சிறந்த சான்றாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.



source https://tamil.indianexpress.com/india/ed-raids-ex-kerala-cm-pinarayi-vijayans-house-in-money-laundering-case-11878592