சனி, 22 ஏப்ரல், 2017

நெல்லை மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! April 21, 2017

நெல்லை மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!


திருநெல்வேலியில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஆட்சியர் கருணாகரனிடம், நிவாரண நிதி குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். 

அப்போது பேசிய அவர், இதுவரை 32 கோடி ரூபாய் நிவாரண நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த விவசாயிகள், ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நிவாரண நிதி பெற்ற பயனாளிகளின் பட்டியலை வெளியிடவும் அவர்கள் வலியுறுத்தினர்.  

தமிழகத்தில் மழை பொய்து கடும் வறட்சி ஏற்பட்டதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 32 கோடி தமிழக அரசு வறட்சி நிவாரணம் வழங்கியது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வறட்சி நிவாரணம் முறையாக கணக்கெடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய விவசாயிகள் , வறட்சி நிவாரணம் என்ன ஆனது எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் பல்வேறு விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக  தெரிவித்தார். ஆட்சியரின் இந்த தகவலுக்கு கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வாக்குவாததில் ஈடுபட்டதுடன் முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் யாருக்கு வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் பயனாளிகள் பெயர் பட்டியலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஓட்ட வேண்டும் என்று தெரிவித்தனர் ஆனால் இணையத்தில் பட்டியலை வெளியிடுவதாக ஆட்சியர் தெரிவித்தார் அதற்கு விவசாயிகள் படிக்காத விவசாயிகள் எப்படி இணையத்தில் பார்க்க முடியும் என்று கேட்டதற்கு உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக படித்திருப்பார்களே என்று தெரிவித்தார் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தாங்கள் மிக மோசமாக அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்..மேலும் இரண்டு கோடி எங்கே எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.