ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! April 30, 2017

தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்!


மத்திய பிரதேசத்தில், தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி உயர் சாதியினர் அராஜகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மனா கிராமம். இங்கு வசிக்கும் சந்தர் மேக்வால் என்ற தலித் சமூகத்தை சேர்ந்தவர், தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். 

மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர் பயன்படுத்தியதை அறிந்த ஆதிக்க சாதியினர், கிராமப் பகுதி வழக்கப்படி தலித்துகள் மேளம் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு என்றும், பேண்டு வாத்தியங்கள் ஆதிக்க சாதியினருக்கானது என்றும் தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பையும் மீறி, சந்தர் மேக்வால், மணமகனை வரவேற்க பேண்டு வாத்தியங்களை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர், தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் பல லிட்டர் மண்ணெண்ணெய் கொட்டியுள்ளனர். இதனால் அந்தக் கிணற்றின் நீரை பயன்படுத்தாத நிலை தலித் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சிங், சம்பந்தப்பட்ட கிணற்றை ஆய்வு செய்து,  ஆதிக்க சாதி ஆட்களை எச்சரித்ததுடன், புதிதாக இரண்டு போர்வெல் போடவும் உத்தரவிட்டுள்ளார்.