வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை உருவாக்க வேண்டும் :ஸ்டாலின் April 28, 2017




தமிழகத்தில் ஊழலை ஒழிக்க ’லோக் அயுக்தா’ அமைப்பை உடனே உருவாக்க வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதை வரவேற்பதாக கூறியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது சேவையை மறந்து தன்னலத்துடனும், சுய நலத்துடனும் செயல்படுவது, நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்பதில் திமுகவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

’லோக் அயுக்தா’ அமைப்பு உருவாக்கப்பட்டால், அதிமுக ஊழல்வாதிகள் மாட்டிக்கொண்டு சிறைக் கம்பிகளை எண்ண வேண்டி வரும் என்ற அச்சத்தால் ’லோக் அயுக்தா’ அமைப்பு உருவாக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மனதில் நிலைநிறுத்தி, மாநிலத்தில் ’லோக் அயுக்தா’ அமைப்பை உருவாக்க அதிமுக அரசு உடனே முன் வர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுததியுள்ளார்.