ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் நிற்க 5 ஆண்டுகள் தடை! April 30, 2017

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு  மத்திய அரசுக்கு பரிந்துரைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் மூலம் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் முயன்றதாகக் கூறி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களைப் பெற முயற்சிக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க தடைவிதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்நிலையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் வேட்பாளர் ஒருவர் சிக்கி அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அவர் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாதபடி சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரித்துரைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இதற்காக கொண்டு வர வேண்டிய திருத்தம் குறித்து சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுத தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் கூறுகின்றன.