சனி, 8 ஜூலை, 2017

பிரதமர் நரேந்திரமோடி தன்னை பழிவாங்குவதாக லாலுபிரசாத் குற்றச்சாட்டு! July 08, 2017

பிரதமர் நரேந்திரமோடி தன்னை பழிவாங்குவதாக லாலுபிரசாத் குற்றச்சாட்டு!


அரசியல் களத்தில் இருந்து தன்னை அப்புறப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் செயல்பட்டு வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே உணவு விடுதிகளைப் பராமரிப்பதற்கான பணிகளை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள சிபிஐ, இது தொடர்பாக லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், தனது அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்  திட்டமிட்ட ரீதியில் பழிவாங்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பியுமான மிசா பாரதியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத்தின் மகளான மிசா பாரதி சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது ஆடிட்டர் ராஜேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள மிசா பாரதியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts: