ஞாயிறு, 14 மார்ச், 2021

மார்ச் 15 & 16 தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?

 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி அன்று வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஏன் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது?

இந்த ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது மூலம் 1.75 லட்சம் கோடி மதிப்பிலான நிதியை உருவாக்குவது குறித்து அறிவித்திருந்தார். ஐடிபிஐ வங்கியை தவிர்த்து இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் அனைத்தையும் தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வங்கிகள் சங்கம் (United Forum of Bank Unions (UFBU)) 9 தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.

வங்கி சேவைகள் எத்தகைய பாதிப்பை சந்திக்கும்?

இரண்டாவது சனிக்கிழமை (மார்ச் 13), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14), 15 மற்றும் 16 தேதிகள் என்று வரிசையாக நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகளில் தாக்கம் ஏற்படும். ஆனால் அனைத்து நாட்களிலும் ஏ.டி.எம். கள் செயல்படும். புது கணக்கு துவங்குதல், பணம் அனுப்புதல், கடன் வாங்குதல் போன்ற வங்கி செயல்பாடுகள் மார்ச் 17ம் தேதி வரையில் பாதிக்கப்படும். அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் வங்கிகள் வழக்கம் போல செயல்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் வேலை நிறுத்ததால் ஏற்படும் கூடுதல் வேலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.பி.ஐ கூறியுள்ளது.

தனியார் வங்கிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதா?

எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, கோடாக், மகிந்திரா, ஆக்ஸிஸ் மற்றும் இந்துஸ்இந்த் போன்ற வங்கிகள் எப்போதும் போல் வழக்கம் போல் செயல்படும். ஆனால் மூன்றுல் ஒரு பங்கு வங்கி சேவைகள் மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசுக்கும் சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏதேனும் நடைபெற்றதா?

மார்ச் 4, 9, 10 தேதிகளில் கூடுதல் தலைமை ஆணையர் எஸ்.சி. ஜோஷி சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இருக்கும் பட்சத்தில் எங்களின் முடிவுகளை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கின்றோம் என்று சங்கங்கள் கூறியுள்ளன. நிதி அமைச்சகத்தில் இருந்து உரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகளால் இது தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை. இந்த கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் என்ற முடிவை அறிவித்தோம் என்று சங்கங்கள் கூறியுள்ளன.

source https://tamil.indianexpress.com/explained/will-the-bank-strike-on-march-15-16-hit-services-283144/