புதன், 10 மார்ச், 2021

கடுமையான குற்ற வழக்குகளை எதிர் கொண்டவர் யார்? அமித்ஷாவுக்கு பினராயி பதிலடி

 வகுப்புவாதத்தின் ஒட்டுமொத்த உருவகமாக அமித் ஷா திகழ்கிறார். வகுப்புவாதத்தை வளர்ப்பதற்கான எந்த செயலையும் செய்ய அவர் தயாராக உள்ளவர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பரப்புரையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளா தங்கக்   கடத்தல் வழக்கு தொடர்பாக பினராயி விஜயன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான கண்ணூர் மாவட்டம்  தர்மடம் என்ற ஊரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜயன், அமித் ஷா குறித்து பேசினார்.

தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சாட்சி ஒருவர்  மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்ற அமித் ஷாவின் குற்றச்சாட்டைக் சுட்டிக்காட்டிய விஜயன்,” இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசு வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டு வருகிறது. எந்த ஆதரங்களையும் விசாரிக்க மாநில அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

Pinarayi’s counter to Amit Shah: Who has faced cases of grave crime?

மேலும், தனது பேச்சைத் தொடர்ந்த விஜயன்,” ஆள் கடத்தலில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவன் நானல்ல  என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.  கொலை, கடத்தல் போன்ற கொடுங்குற்றங்களுக்கான வழக்கை எதிர்கொண்டவர் யார். இத்தகைய வழக்கினை நீங்கள் தான் (அமித் ஷா) எதிர்கொண்டு வருகிறீர்கள் . இவையெல்லாம் எங்கள் மாநிலத்தில் அரங்கேற்றப்பட்டும் வரும் பொய் வழக்குகள் அல்ல. அனைத்தும் உண்மையானவை. சாட்சியின் மரணம் குறித்து ஆதாற்றமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பாதீர்கள்’’ என்று தெரிவித்தார்.

 

 

சொராபுதீன் ஷேக் படுகொலையை நினைவு கூர்ந்த விஜயன், “போலி என்கவுண்டர் கொலை வழக்கு  உங்களுக்கு நினைவில் இல்லையா? அந்தக் கொலைகளுக்கு சதித்திட்டம் தீட்டியதாக யார் மீது குற்றம் சாட்டப்பட்டது? குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர் பெயர்அமித் ஷா. உங்களுக்கு ஞாபகம் இல்லையா…. இப்படிப்பட்ட நபர் கேரளாவில் நீதி உணர்வைப் பற்றி எங்களுக்கு பாடம் கற்பிக்கிறார்” என்று தெரிவித்தார்.

22 நவம்பர் 2005 அன்று ஐதராபாதிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு பயணித்த சொராபுதீன் சேக் மற்றும் அவரது மனைவி கௌசர் ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் நடத்தப்பட்ட மற்றொரு போலி என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பினராயி விஜயன் மேலும் கூறுகையில், சொராபுதீன் சேக் போலி எண்கவுண்டர் வழக்கில், மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில்,  நீதிபதி லோயாவின் மரணம் இன்றளவும்  மர்மமாக உள்ளது என்று  தெரிவித்தார். “நீதிபதி லோயாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் இன்றளவும் போராடி வருகின்றனர். அமித் ஷா அதைப் பற்றி ஏதேனும் பேச முடியுமா? பாஜகவில் உள்ள ஏதேனும் ஒரு தலைவர் இதைப் பற்றி பேசமுடியுமா? உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லை என்றால், நாங்கள் சில விஷயங்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்போம் ’’ என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “ஒரே ஆண்டில் தனது செல்வத்தை 16,000 மடங்கு அதிகரித்து ‘ஆச்சே தின் ’உருவாக்கிய நபரை உங்களுக்குத் தெரியாதா?….. அந்த நபர் பினராயி விஜயன் அல்ல. உங்கள் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. அதை வைத்துக் கொண்டு மற்றவர்களை  மதிப்பிட்டு விடலாம் என்று நினைக்காதீர்கள்… ’’ என்று தெரிவித்தார்.

தங்கக் கடத்தல் வழக்கைப் பற்றி பேசிய விஜயன், “சங்க பரிவர் அமைப்பை சேர்ந்தவர் தான் முக்கிய சதிகாரன் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது  சுங்கத்துறையின் பணியாகும். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபின்,  திருவனந்தபுரம் விமான நிலையம் கடத்தல் மையமாக மாறியுள்ளது. கடத்தப்பட்ட தங்கத்திற்கு என்ன நடந்தது, யார் அதை வாங்கினார்கள்..நீங்கள் அதை நிரூபிக்க விரும்பவில்லை…. ” என்று விஜயன் குற்றம் சாட்டினார்.

நீங்கள் இதுவரை எதிர்கொண்டவர்களை போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் வித்தியாசமானவர்கள். நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது. ஏனெனில் இங்கு எங்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது என்றும் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/india/amit-shah-embodiment-of-communalism-pinarayi-vijayan-counter-to-amit-shah-251464/