செவ்வாய், 9 மார்ச், 2021

உஜ்வாலா டு ஜூம்லா… மோடி- அமித்ஷா கூட்டணியின் பொய்கள்: மமதா கடும் தாக்கு

 மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருக்கும் நரேந்திர மோடி, மமதா பானர்ஜி மற்றும் அவருடைய அரசை விமர்சித்த அதே நேரத்தில், முதல்வர் மமதா பானர்ஜி சிலிகுரியில் பிரதமரை ”பொய்யர்” என்று விமர்சித்துள்ளார். மேலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்திற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“பிரதமர், எல்.பி.ஜி, பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை ஏன் உயர்ந்தது என்ற கேள்விக்கு பதில் கூற வேண்டும். இல்லை என்றால் நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என்று மமதா கூறியுள்ளார். பிரிகேட் பரேட் மைதானத்தில் தன்னுடைய பிரச்சாரத்தின் போது மோடி விமர்சனம் செய்த மமதாவின் இரு சக்கர வாகன போராட்டத்தை தொடர்ந்து, மமதா சமையல் எரிவாயு சிலிண்டரின் கட்-அவுட்டோடு பாதயாத்திரை மேற்கொண்டார்.

மோடி தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்த அதே நேரத்தில் சிலிகுரியின் டார்ஜிலிங்கில் தன்னுடைய பாதயாத்திரையை மமதா துவங்கினார். 3.5 கி.மீக்கு அப்பால் உள்ள வீனஸில் அது நிறைவுற்றது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சந்திரிமா பட்டாச்சார்யா, ககலி கோஷ் தஸ்திதார், டோலா சென், மிமி சக்ரவர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட பெண் தலைவர்கள் மமதாவுடன் பேரணியில் சென்றனர்.

தேர்தலுக்கு முன்பு மோடி உஜ்வாலா என்றார். தேர்தலுக்கு பிறகு அனைத்தும் ஜும்லா (பொய்யான வாக்குறுதிகள்). திருடர்களுக்கெல்லாம் தாய் போன்று இருக்கும் அவர் மிகப்பெரிய மோசடியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேரணி முடிந்தவுடன் மமதா கூறியுள்ளார்.

இங்கு வேலை செய்ய மோடி ஒரு போதும் வந்ததில்லை. ஆனால் அவதூறு பிரச்சாரத்தை மட்டுமே கையாளுவார். நாங்கள் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்குகின்றோம். ஆனால் அவர்களுக்கு சமைக்க சமையல் எரிவாயு தேவைப்படும். சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட ரூ. 900. உங்களின் விலை என்ன மோடி? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெண்களுக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்படும் வன்முறைகள் குறித்து பேசிய அவர், உ.பி., ம.பி, குஜராத் போன்ற மாநிலங்களில் நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? மேற்கு வங்கத்தில் பெண்கள் நள்ளிரவிலும் பாதுகாப்பாக பயணிக்க முடியும். ஆனால் அந்த மாநிலங்களில் பகல் மூன்று மணிக்கும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார். எல்.பி.ஜி. விலையை உயர்த்துவதன் மூலம், மத்திய அரசு தொடர்ந்து பெண்களை இலக்காக கொண்டு செயல்படுகிறது என்று கூறிய அவர், எதிர்வரும் 5 மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடைவது உறுதி என்று கூறினார்.

பாஜகவினர் மேற்கு வங்கத்தில் பணம் மோசடி செய்வது குறித்தும், சோனார் பங்களா கட்டுவது குறித்தும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், மோடியை விர மிரட்டி பணம் பறிக்கும் நபர் யார்? சாய்ல், கோல் இந்தியா, பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்களை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். இதற்கு எவ்வளவு கோடி உங்களுக்கு பணமாக கிடைத்தது என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.

“அதிகாரம் செய்வது குறித்து பேசுகிறார்கள். ஆனால் மோடி – ஷாவில் யார் அதிக அளவில் அதிகாரம் செலுத்துகிறார்கள். பாஜகவை ஒரு யூனியன் பிரதேசம் போல் மாற்றி உள்ளனர். அக்கட்சியில் உள்ள அனைவரும், அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

மமதா பிரதமர் பொய் கூறுவதாக குற்றம் சுமத்தினார். பிரதமரைப் போன்ற பெரிய பொய்சொல்லியை நான் பார்த்ததே இல்லை. எந்த பிரதமர்களும் இவ்வளவு பொய் கூறியதில்லை. அதனால் தான் கூறுகிறேன் “கேலா ஹோபோ”. நீங்கள் தேதியையும், இடத்தையும், நேரத்தையும் முடிவு செய்யுங்கள். நேருக்கு நேர் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருக்கின்றன. அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்ப்போம் என்று மமதா கூறினார்.

மொட்டேரா மைதானத்தின் பெயரை மாற்றியது குறித்து பேசிய அவர், இது ஒரு வெட்கக்கேடான செயல் என்றார். சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் இந்த மைதானம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மோடியின் பெயர் உள்ளது. கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அவரின் புகைப்படம் உள்ளது. செயற்கைக்கோளில் தன்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் வைத்து விண்ணுக்கு அனுப்புகிறார். இது மிகவும் வெட்கக்கேடனாது என்று மமதா கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/ujjwala-to-jumla-who-can-be-bigger-syndicate-than-modi-shah-mamata-251271/