வியாழன், 11 மார்ச், 2021

மேகன் – ஹாரி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கப்படும் – எலிசபெத்

 எலிசபெத் மகாராணி செவ்வாய்கிழமை அன்று, தன்னுடைய பேரன் ஹாரி மற்றும் அவருடைய மனைவி மேகன் இருவர் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மேகனிடம், அவரின் குழந்தை குறித்து இனவெறிக்கு ஆளாகும் வகையில் பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேகன் மற்றும் ஹாரி, டெல்-ஆல் டிவி நேர்காணலில் ஓப்ரா வின்ஃப்ரேயுடன் பேசிய காட்சிகள் அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சி 1997 ஆம் ஆண்டு ஹாரியின் தாய் டயானாவின் மரணத்திற்குப் பின்னர் முடியாட்சியை மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆழ்த்தியுள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நேர்காணலில், மேகன் தன்னுடைய மகனின் நிறம் குறித்து அரசு குடும்பத்தினர் கவலை தெரிவித்தது குறித்தும், தற்கொலை எண்ணங்கள் மேலெழுந்த போது அவருக்கு தேவையான உதவிகளை வழங்க மறுத்ததாகவும் கூறினார்.

ஹாரி, தன்னுடைய தந்தையும், அரச குடும்பத்தின் இளவரசருமான சார்லஸ் தன்னை கைவிட்டுவிட்டதாகவும் கவலை தெரிவித்தார். கடந்த சில வருடங்களாக மேகன் மற்றும் ஹாரிக்கு அரச குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து அறிந்து அரச குடும்பத்தினர் வருத்தம் அடைந்திருப்பதாக எலிசபெத் வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்; மனம் திறந்த மேகன்

நிறவெறி புகார் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சில இதர புகார்கள் குறித்து விரைவில் குடும்ப அளவில் முடிவு எட்டப்படும். ஹாரி, மேகன் மற்றும் ஆர்க்கி எப்போதும் இந்த குடும்பத்தால் மிகவும் நேசிக்கப்படும் உறவுகளாக இருப்பார்கள். இந்த புகார்களை குடும்ப விவகாரமாக பார்க்கிறது பக்கிங்காம் அரண்மனை என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் இந்த நிகழ்ச்சியை சுமார் 12.4 மில்லியன் நபர்களும், அமெரிக்காவில் சுமார் 17.1 மில்லியன் நபர்களும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி இங்கிலாந்தில் இரண்டு விதமான கருத்துகளை முன்வைத்துள்ளது. ஒன்று பக்கிங்காம் அரண்மனையில் பின்பற்றப்படும் நடைமுறைகள் எவ்வாறு சகிப்புத்தன்மையற்றது மற்றும் காலாவதியானது என்றும், மற்ற சிலர் எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுதியற்ற சுய தாக்குதல் இது என்றும் கூறியுள்ளனர்.

“பல நூற்றாண்டுகளாக முடியாட்சியின் பிழைப்புக்கான திறவுகோல், அந்தக் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அதன் திறனைக் கொண்டுள்ளது. இது மீண்டும் மாற்றியமைக்கப்பட வேண்டும், ”என்று டைம்ஸ் பத்திரிக்கை தன்னுடைய ராயல் அட்டாக் என்ற கட்டுரையில் கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள லண்டனுக்கு வந்த சார்லஸிடம் இந்த நேர்காணல் குறித்து கேட்ட போது அவர் பதில் அளிக்க முன்வரவில்லை.

source https://tamil.indianexpress.com/international/queen-elizabeth-responds-to-harry-and-meghans-accusations-282288/