செவ்வாய், 30 மார்ச், 2021

ஐ.நா மனித உரிமை தீர்மானம் – அடிபணிய மறுக்கும் இலங்கை அரசு

 இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுமார் 30 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரங்களை ஐ.நா அமைப்பு திரட்டலாம் என்று மார்ச் 23ம் தேதி அன்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசை தீர்மானம் வலியுறுத்துகிறது.

இலங்கையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, “நல்லிணக்க பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தீர்மானம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கொண்டுவந்துள்ள தீர்மானம், நாட்டின் வளர்ச்சியை விரும்பாத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் செய்வதாக இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற அழுத்தங்களுக்கு தனது அரசாங்கம் அடிபணியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2015 ம் ஆண்டில் ஐநா மனித உரிமைகள் தீர்மானத்திற்கு நிதியுதவி அளித்ததன் மூலம் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான முந்தைய அரசாங்கம் இலங்கையின் இறையாண்மைக்கு துரோகம் இழைத்தாக ராஜபக்‌ஷே குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தீர்மானத்திற்கு வாக்களிப்பதைத் தவிர்த்த 14 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்த விஷயத்தில் ,அங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில் இலங்கையின் ஒருமைபாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இத்தீர்மானத்தை இலங்கைத் தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.

இலங்கை அரசின் புள்ளி விவரங்களின் படி போரின் போது சுமார் 10000 பேர் இறந்துள்ளனர். 20000பேர் காணாமல் போயுள்ளனர்.

ஆனால், கடந்த 2009ல் நடைபெற்ற இறுதிப்போரின் போது, LTTE  தலைவர் பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மறுக்கும் இலங்கை இராணுவம் தமிழர்களை புலிகளின் கட்டுபாட்டிலிருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை அது, என்று கூறுகிறது.

சர்வதேச உரிமைகள் குழு, சுமார் 40000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று குற்றம் சாட்டுகிறது. ஐநா அமைப்பு இரு தரப்புமே தவறு செய்ததாக கூறுகிறது.

எனினும் தற்போது ஐநா மனித உரிமைகள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் வாயிலாக உண்மை நிலவரம் வெளிவரலாம்.

source https://tamil.indianexpress.com/international/srilanka-refuse-unhrc-resolution-286897/