வெள்ளி, 12 மார்ச், 2021

பிராமணருக்கு இந்துவாக இருப்பது எப்படி என்று பாடம் எடுக்க தேவையில்லை – மமதா

 மமதா பானர்ஜி தன்னை ஒரு இந்து பிராமணராக அடையாளப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், சாந்திபாத்தில் இருந்து ஸ்லோகங்களையும் கூறினார். குஜராத் மற்றும் ராஜஸ்தானிலில் இருந்து வந்து வங்கம் குறித்து யாரும் கூற வேண்டாம் என்று கூறினார். மேலும் சாலையோர தேநீர் கடை ஒன்றில் தேநீர் தயாரித்து குடித்த அவர், பபனிப்பூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டு வேலைகளை கவனித்துக் கொண்டார். பின்பு என்னுடைய பெயரை மறந்தாலும் மறப்பேனே தவிர நந்திகிராமை மறக்க மாட்டேன் என்று கூறினார்

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் மிகவும் அதிகமான அழுத்தம் நிறைந்த பகுதியாக கருதப்படும் நிலையில் மமதா பானர்ஜிக்கும் அவரது முன்னாள் நெருங்கிய உதவியாளரான சுவேந்து அதிகாரிக்கும் இடையில் கடும் போட்டி இங்கே நிலவ வாய்ப்பு உள்ளது. தேர்தல் உறுதி செய்யப்பட்ட பிறகு நந்திகிராமில் முதன்முறையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் மமதா பானர்ஜி. பூத்தில் பணியாற்ற உள்ள கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர், நந்திகிராமில் புதன்கிழமை அன்று அவரின் வேட்புமனுவை தாக்கல் செய்ய இருப்பதாக உறுதி அளித்தார்.

பாஜகவிடம், நல்ல இந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று கூறிய அவர், ”இந்துத்துவ கார்டை” என்னிடம் காட்டி விளையாட வேண்டாம் என்று கூறினார். மேலும் நான் ஒரு இந்து பிராமண பெண். என்னுடைய வீட்டை வெளியே வரும் போது நான் சாந்திபாத் கூறிவிட்டு தான் வருவேன். குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் உள்ளூர்வாசிகள் ஆகிவிட்டனர். நான் வெளியூர்வாசி ஆகிவிட்டேனா என்றும் கேள்வி எழுப்பினார்.

நந்திகிராமின் தியாகிகள் என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கூறிய அவர் பபனிப்பூர் சென்று பாருங்கள், அனைத்து மேம்பாட்டு வேலைகளும் முடிக்கப்பட்டுள்ளது. நந்திகிராமை மாடல் நந்திகிராமாக மாற்றுவேன். அங்கே வேலையின்மை இருக்காது. கல்வி கற்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

அதிகாரி பெயரை தெரிவிக்காமல், மமதா தனியாக நில இயக்கத்தை மேற்கொண்டதாக கூறினார். (அப்போது நந்திகிராம் எம்.எல்.ஏவான அதிகாரி நில இயக்கத்திற்கான திரிணாமூல் முகமாக செயல்பட்டார். போராட்டக்காரர்கள் சுடப்பட்டார்கள் என்று தெரிந்த பிறகு நந்திகிராமிற்கு விரைந்துவந்தேன். என்னுடைய பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது மற்றும் மருத்துவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பிறகும் நான் இங்கு விரைந்து வந்தேன். ஆனால் சி.பி.எம். கட்சியினர் என்னை கொலாகாட்டிலேயே நிற்க வைத்தனர். அந்த நேரத்தில் ஆளுநர் கோபல்கிருஷ்ண காந்தி என்னிடம், “உன்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர்” என்று கூறினார். அன்று யாரும் என்னுடன் இல்லை. விவசாயிகளின் உரிமைக்காக என்றுமே போராடுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவது ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கூறிய அவர், எனக்கு கிராமங்கள் பிடிக்கும். இது குறித்த பழைய நினைவுகள் எனக்கு உள்ளது. சிங்கூர் அல்லது நந்திகிராம் தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். இயக்கத்தின் புனிதமான இடங்களில் இவையும் உள்ளன. நந்திகிராமத்தில் நான் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துள்ளேன். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை இங்கே வருவேன். சில நாட்கள் கழித்து நான் இங்கே வாழ குடிசை ஒன்றை உருவாக்கிக் கொள்வேன் என்று அவர் கூறினார்.

மமதாவிற்கு எதிராக போட்டியிடும் அதிகாரி தன்னை மண்ணின் மைந்தன் என்று கூறிக்கொண்டார். நான் இங்கே அருகில் இருக்கும் பிர்பூமில் பிறந்தேன். ஆனால் என்னை இங்கே பிறக்காத ஒருவர் வெளியூர்க்காரர் என்று அழைக்கிறார் என்று மமதா பதிலுக்கு கூறியுள்ளார். இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்த முயலுகின்றனர். நந்திகிராமில் 70-30 என்று மக்களை பிரிக்க முற்படுகின்றனர. ஆனால் அவர்களிடம் நான் 100% என்பதை காட்ட வேண்டும். நந்திகிராம் மக்கள் தொகையில் 70% இந்துக்களும், 30% இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாக்குகளை பெற நான் மக்களின் பைகளில் பணத்தை வைக்கவில்லை. ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று அவர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்குங்கள் என்று மமதா கூறினார். நந்திகிராமில் ஏப்ரல் 1ம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. பேரணிக்கு பிறகு மமதா நந்திகிராம் கிளர்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மஸார் மற்றும் கோவில்களுக்கு சென்றார். மக்களைச் சந்திப்பதற்காக தனது வாகனம் நிறுத்தப்பட்ட பல்வேறு இடங்களில் ஒன்றில், மம்தா தேநீர் தயாரித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிஷ்ணுபடா புய்யான் வீட்டில் இரவில் தங்கினார் மமதா. எஸ்.கே. ஃபரூக் வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தங்காதது குறித்து கேட்டபோது, நான் இரண்டு வீடுகளிலும் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளேன். என்னுடைய கட்சி தலைவர் சுபத்ரா பக்‌ஷி அங்கே தங்குவார் என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/fought-alone-in-nandigram-dont-teach-a-brahmin-to-be-hindu-251725/