வெள்ளி, 19 மார்ச், 2021

பெண் எஸ்பி பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட்

  தமிழக சிறப்பு டி.ஜி.பி. அதிகாரி பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் ஊடகங்களில் தொடர்ந்து வெளியான நிலையில், வழக்கை தானாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி இந்த வழக்கிற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் புகார் அடிப்படியில் சிறப்பு டி.ஜி.பி. அதிகாரியை காத்திருப்பு பட்டியலில் வைத்த தமிழக அரசு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பியையும் பணியிடை நீக்கம் செய்து, வணிக குற்ற விசாரணை பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது.


இந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை நடத்தி வரும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, ‘சிறப்பு டி.ஜி.பி. அதிகாரிக்கு உதவியதாக கூறப்படும் எஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் முதலாவதாக குற்றம்சாட்டடப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி அதிகாரியை இன்னும் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ‘இந்த வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்றால் சிறப்பு டிஜிபி அதிகாரி பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு டிஜிபி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது

இதற்கிடையில் மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான உள் விசாரணைக் குழு, குற்றப்பிரிவு சி.ஐ.டி மற்றும் இன்னும் பலர், சிறப்பு டி.ஜி.பி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. மீது புகார் தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-in-tamil-sexual-harassment-case-tamil-nadu-government-suspends-special-dgp-284353/