சனி, 27 மார்ச், 2021

மோடியின் தாடி தான் வளருகிறது; நாட்டின் பொருளாதாரம் அல்ல: மம்தா பானர்ஜி

 தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பிரதமர் மோடியின் தாடி தான் வளருகிறது; நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

“பிரதமர் மோடி தன்னை விவேகானந்தர் என்று அழைத்துக் கொள்கிறார். சில நேரங்களில் அவர் தன்னை ரவீந்திரநாத் தாகூர் என்றும் கூறிக்கொள்கிறார். இப்போது ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு தன்னுடைய பெயரை ஈட்டுள்ளார் நீண்ட தாடி உள்ளது என்பதால் யாராலும் ரவீந்திரநாத் தாகூர் ஆகி விட முடியாது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி பாதையை நோக்கி நகர்கிறது. மேலும் நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது, ஆனால் அவரது தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில், அவர் ரவீந்திரநாத் தாகூர் போலும், மகாத்மா காந்தியைப் போலும் ஆடைகளை உடுத்திக்கொண்டு வலம் வருகிறார்.

பாஜகவுக்கு இரண்டு சிண்டிகேட்டுகள் உள்ளன, ஒன்று டெல்லியில் இருந்து குஜராத் மற்றும் உ.பி. வரை கலவரம் செய்கிறது, மற்றொன்று பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்?. அவர்களின் மூளையில் உள்ள நட்டு கழன்று விட்டது என்று நான் நினைக்கிறன்”என்று பாசிம் மெடினிபூர் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

முழு நாடும் விற்கப்பட்டு “நரேந்திர மோடி” எனும் பெயரிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பானர்ஜி வலியுறுத்தி பேசியுள்ளார்.

புர்பா மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் மம்தா, எதிர்க்கட்சியினர் மக்களை குண்டர்களை கொண்டு அச்சுறுத்தி வருவதாகவும், பாஜக வேறு மாநிலங்களில் வரவேற்கப்பட்டுள்ள குண்டர்களை கொண்டு மக்களின் ஓட்டுக்களை திருட திட்டமிட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 1 ம் தேதி வரை தான் அதே தொகுதியில் தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

source : https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-only-pm-modis-beard-growing-not-economy-says-mamata-286143/