உலக நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி வருகிறது. உலக அளவில் தினசரி கொரோனா மரணங்களில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. இதனையடுத்து பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக பொதுமக்களில் மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் மத்திய பாஜக அரசின் அறிவியல் பூர்வமற்ற மற்றும் பிடிவாத போக்கின் காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய மருத்துவ சங்கம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பல்வேறு மாநில முதல்வர்களும் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறி வரும் நிலையில், மத்திய அரசு அதை நிராகரித்து இப்போது அதற்கு அவசியமில்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. வயது வித்தியாசம் இல்லாமலும் முன்பதிவு இல்லாமலும் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிதம்பரம், நாடு பேரழிவை சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், பணமதிப்பிழப்பு முதல் கொரோனா தடுப்பூசி வரை பாஜக வின் தவறான கொள்கைகளால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், மோடி அரசை போல், ஜனநாயக விரோத அரசு உலகில் இல்லை எனவும், விமர்சித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/p-chidambaram-tweet-about-central-govt-covid-vaccine-289846/