புதன், 26 மே, 2021

கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம்: முதல்வர்!

 26/05/2021 கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் மற்றம் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கான, இழப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கும் அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இயங்கி வரும் பத்திரிகையாளர்கள், மற்றும் ஊடகத்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகையான 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இதேபோல், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ 10 லட்சம் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் அனைவரும், இந்த நோய்த் தொற்று காலத்தில், மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியை கவனமுடன் மேற்கொள்ளுமாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.